சென்னை வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்க தேர்தலை நவம்பர் 27ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்: கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னை வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்க தேர்தலை நவம்பர் 27ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்கம் ெசயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் சார்பில் பெரிய அளவில் உணவு கூடம் நடத்தப்படுகிறது. தினமும் ஏராளமான வழக்கறிஞர்கள் இந்த கேண்டீனில் உணவருந்தி வருகிறார்கள். மானிய விலையில் உணவு வழக்கப்படுவதால் கேண்டீனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், இந்த கூட்டுறவு சங்கத்தை நிர்வகிக்க தற்போது நிர்வாகிகள் இல்லை. தனி அதிகாரியின் கட்டுப்பாட்டில் சங்கம் இயங்கி வருகிறது. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கூட்டுறவு சங்கத்திற்கு தேர்தல் நடத்தப்படாத நிலையில், சங்கத்தின் தேர்தலை நடத்தக்கோரி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வி.ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018ல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, சங்கத்தின் தேர்தலை நடத்த மூத்த வழக்கறிஞர் வி.ஜெயராமன், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார்அசோசியேஷன் அப்போதைய செயலாளர் வி.ஆர்.கமலநாதன், லா அசோசியேஷன் அப்போதைய தலைவர் டி.வி.கிருஷ்ணகுமார், பெண் வழக்கறிஞர்கள் சங்க அப்போதைய தலைவர் வி.நளினி ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது. இந்த குழு வாக்காளர்களின் பெயர்களை சரிபார்த்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தரவேண்டும். அதை ஆய்வு செய்யத பிறகு மாவட்ட தேர்தல் அதிகாரி வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில், உயர் நீதிமன்றம் நியமித்த குழு தனது பணியை முடித்துள்ள நிலையில் தேர்தல் நடத்தப்படவில்லை.
எனவே, தேர்தலை நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் வி.ஆனந்த் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் ஆஜராகி வாதிடும்போது, ஏற்கனவே தலைமை நீதிபதி அமர்வின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட குழு வாக்காளர்களை ஆய்வு ெசய்து பட்டியலை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துவிட்டது என்றார். அதற்கு அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் கீதா தாமரை செல்வன், வாக்காளர் பட்டியல் இன்னும் தேர்தல் அதிகாரியிடம் தரப்படவில்லை என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குழுவில் இடம்பெற்ற மூத்த வழக்கறிஞர் இறந்துவிட்டதால் தற்போது குழுவில் உள்ள ஜி.மோகனகிருஷ்ணன், குழு உறுப்பினர்கள் வி.ஆர்.கமலநாதன், டி.வி.கிருஷ்ணகுமார், வி.நளினி மூத்த ஆகியோர் கையெழுத்திட்டு வாக்காளர் பட்டியலை தேர்தல் அதிகாரியிடம் வழங்க வேண்டும். சிறப்பு அதிகாரி அந்த பட்டியலை வாங்கி அக்டோபர் 25ம் தேதிக்குள் ஆய்வு செய்ய வேண்டும். அதன் பிறகு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் அதிகாரி நவம்பர் 27ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.