Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு அதிகபட்சமாக 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 44,081 பணியாளர்களுக்கு ரூ.44 கோடியே 11 லட்சம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது;

போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்படக்கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு அச்சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் (போனஸ்) வழங்கப்படும். உபரி தொகை இல்லாமல் உள்ள சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தீபாவளி பண்டிகையினை சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏதுவாக 10 விழுக்காடு மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் பணிபுரிந்து போனஸ் சட்டத்தின் கீழ் வராத நிகர லாபம் ஈட்டும் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். போனஸ் சட்டத்தின் கீழ் வராத நிகர இலாபம் ஈட்டாத தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களாக இருப்பின் அவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.3000/-ம், தொடக்க சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.2,400/-ம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 44,081 பணியாளர்களுக்கு ரூ. 44 கோடியே 11 இலட்சம் மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட உள்ளது. அரசின் இந்த நடவடிக்கை கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மிகவும் ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும், ஊக்கத்துடனும் பணியாற்றுவதையும் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதையும் உறுதிசெய்திட வழிவகை செய்யும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.