சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணைய தலைவர் மற்றும் பதிவாளர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்தனர். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக, அமலாக்கத்துறை சார்பில் உயர்நிதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆகாஷ் பாஸ்கரன் தரப்பு வழக்கறிஞர், உயர்நீதிமன்ற தடை உத்தரவு உள்ள நிலையில், கடந்த செப்டம்பர் 20-ம் தேதி நோட்டீஸ் அனுப்பி அக்டோபர் 8ம் தேதி வழக்கின் இறுதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதாக தெரிவித்தார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணைய தலைவர் பிரதீப் குமார் உபாத்தியாயா மற்றும் நிர்வாக பதிவாளர் நஸ்ரின் சித்திக் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.