Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. மன்னிப்புக் கேட்டார் சென்னை மாநகராட்சி ஆணையர்; ரூ.1 லட்சம் அபராதம் ரத்து..!!

சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் மன்னிப்பு கோரியதால் ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப்பெற்றது. சென்னையில் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கு, கடந்த 8ம் தேதி தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது ஏன் என கேள்வி எழுப்பியது. இந்த உத்தரவை அமல்படுத்ததாததற்காக சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், இத்தொகையை ஆணையரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து, அதை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை நிறுத்தி வைக்க முறையிட்டபோது, ஐஏஎஸ் அதிகாரி என்றால் கோர்ட்டை விட மேலானர் என்று தன்னை நினைத்து கொள்கிறாரா?, எங்கள் அதிகாரத்தை காட்டலாமா? என்று காட்டமாக கூறிய சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், இதனைத் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவர் ஆஜராகவில்லை என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, உரிய பிரமாண பத்திரத்துடன் நாளை (இன்று) நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆஜரானார். அப்போது, நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறவில்லை என்றும், நடந்த தவறுக்கு முழுப் பொறுப்பு ஏற்பதாகவும் அவர் தலைமை நீதிபதி அமர்வில் தெரிவித்ததை அடுத்து ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை சென்னை ஐகோர்ட் திரும்பப் பெற்றுக்கொண்டது.