சென்னை: மெட்ரோ ரயில் 2ம் கட்ட கட்டுமான பணிகள் காரணமாக பச்சை வழித்தடத்தில் தற்காலிகமாக ரயில் சேவையில் மாற்றம் செய்வதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் 2ம் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மேலே நடைபெற்று வரும் 2ம் கட்ட கட்டுமானப் பணிகளின் காரணமாக, பச்சை வழித்தடத்தில் கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவைகள் வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை தற்காலிகமாக மாற்றியமைக்கப்படுகிறது.
நீல வழித்தடத்தில் (விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை ஏஜி-டி.எம்.எஸ் வழியாக) இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவையில் (நேரம் மற்றும் அட்டவணையில்) எந்த மாற்றமும் இருக்காது. இந்த தற்காலிக மாற்றங்கள், 2ம் கட்ட கட்டுமான பணிகள் சீராகவும், சரியான நேரத்திலும் நடைபெறுவதற்கு அவசியமானவை. பச்சை வழித்தடத்தில் (4 நாட்களில் மட்டும் காலை 5 மணி முதல் 6 மணி வரை):
* பரங்கிமலை மெட்ரோ நிலையம் முதல் அசோக் நகர் மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ ரயில்கள் 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
* சென்னை விமான நிலையம் மெட்ரோ நிலையம் முதல் அசோக் நகர் மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ ரயில்கள் 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
* சென்ட்ரல் மெட்ரோ முதல் கோயம்பேடு மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ ரயில்கள் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
கோயம்பேடு முதல் அசோக் நகர் மெட்ரோ நிலையம் வரை காலை 5 மணி முதல் 6 மணி வரை பின்வரும் தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுகின்றன:
* 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை காலை 5 மணி முதல் 6 மணி வரை மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்.
* இந்த நேரத்தில் பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு மற்றும் அசோக் நகர் மெட்ரோ நிலையம் இடையே, காலை 5 மணி முதல் 6 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
* காலை 6 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் தொடங்கும் மற்றும் வழக்கமான மெட்ரோ ரயில் அட்டவணை (வாரநாள்/ சனிக்கிழமை/ ஞாயிறு கால அட்டவணை) பின்பற்றப்படும்.