Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொகுதி மறுவரையறை பிரச்னை நம் வாசற்படி வரை வந்துவிட்டது; பாஜவிடம் அதிமுக மண்டியிட்டாலும் திமுக தலைமையில் தமிழ்நாடு அணிவகுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் உறுதி

சென்னை, ஜூன் 7: தொகுதி மறுவரையறை பிரச்னை நம் வாசற்படி வரை வந்துவிட்டது. பாஜவிடம் அதிமுக மண்டியிட்டாலும், திமுகவின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணிவகுக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் உறுதிபட கூறியுள்ளார். மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:

* மக்கள்தொகை கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதை தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல. நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது.

* ஒன்றிய பாஜ அரசு சென்சஸ் மற்றும் தொகுதி மறுவரையறையை செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது. மக்கள்தொகை கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன.

* அதேவேளையில், மக்கள்தொகை கட்டுப்பாட்டை பல பத்தாண்டுகளாக காற்றில் பறக்கவிட்ட மாநிலங்களோ நாடாளுமன்றத்தில் கூடுதல் இடங்களை பெற இருக்கின்றன. அநீதியான இந்த நடவடிக்கை கூட்டாட்சியின் சமநிலையை குலைத்து, பொறுப்பற்ற தன்மைக்கு வெகுமதி அளிக்கிறது.

* இந்த சதித் திட்டம் குறித்து நான் முன்பே எச்சரித்திருந்தேன். தற்போது, ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரமும், பாஜ எப்படி இந்த கைவரிசையை காட்டப் போகிறது என்பதை விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார். நாம் விழிப்போடு இருப்பது மட்டுமல்ல, தென்னகத்தின் குரலை காப்பாற்றிக் கொள்வதற்கான வியூகங்களையும் தீட்டவேண்டிய தருணம் இது.

* 1971ம் ஆண்டு சென்சஸ் தரவுகள் போய், 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகள்தான், அதற்கடுத்து உடனே நிகழும் தொகுதி மறுவரையறைக்கு, அடிப்படையாக அமையும். தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைத்து, தனக்கு சாதகமான முறையில் நாடாளுமன்ற இடங்களை பாஜ நிர்ணயித்துக் கொள்ளத்தான் இது வழி ஏற்படுத்தும்.

* தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களின் கவலைகள் கருத்தில் கொள்ளப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் சொல்கிறது. ஆனால் இவை தெளிவற்ற மழுப்பல் பதில்கள். இவர்கள் சொல்வதை தண்ணீரில்தான் எழுதிவைக்க வேண்டும். நாம் கேட்பதெல்லாம் நாடாளுமன்றத்தில் உறுதி அளியுங்கள், உரிய அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை நிறைவேற்றுங்கள் என்பதே!

* பிரிவு 370ஐ நீக்கிய பிறகு என்ன நடந்தது என்று பார்த்தாலே இவர்களது பேச்சின் லட்சணம் புரிந்துவிடும். ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என ஒன்றிய அரசு சொன்னது. தேர்தலும் நடந்தது. உச்ச நீதிமன்றத்திலேயே உறுதி அளிக்கப்பட்டது. ஆனாலும், ஜம்மு காஷ்மீர் இன்னும் யூனியன் பிரதேசமாகத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட சத்தியவான்களோடுதான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.

* 2027 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை ஒன்றிய அரசு மேற்கொண்டால், தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்கு குறைந்துவிடும்.

* அதிமுக போன்ற அடிமை துரோகிகள் தங்களின் சுயநலத்துக்காக பாஜ முன் மண்டியிட்டாலும், திமுகவின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணிவகுக்கும். நம் மாநிலம் வளர்ச்சியடைந்துள்ள ஒரே காரணத்துக்காக தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.