Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உத்தரபிரதேச வாக்காளர்கள் பட்டியலில் மோடி தொகுதியில் ஒரு தந்தைக்கு 50 மகன்கள்: காங்கிரஸ் வெளியிட்ட தகவலால் பரபரப்பு

லக்னோ: மோடியின் வாரணாசி தொகுதியில் ஒரே நபருக்கு 50 மகன்கள் என வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாக காங்கிரஸ் கிளப்பிய குற்றச்சாட்டு, உத்தரபிரதேசத்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சி, பிரதமர் மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் மிகப்பெரிய அளவில் வாக்காளர் மோசடி நடந்திருப்பதாகக் கூறி பெரும் புயலைக் கிளப்பியது. வாரணாசி மாநகராட்சியின் 51வது கோட்டத்தில் உள்ள காஷ்மீரிகஞ்ச் பகுதியின் வாக்காளர் பட்டியலை சமூக ஊடகங்களில் வெளியிட்ட அக்கட்சி, அதில் ராம் கமல் தாஸ் என்ற ஒரே நபரின் மகன்களாக 50க்கும் மேற்பட்டோர் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டியது. அந்த பதிவில், ‘வாரணாசியில் தேர்தல் ஆணையத்தின் மற்றுமொரு அதிசயம் பாருங்கள்! ஒரே நபரின் பெயரில் 50 மகன்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இளைய மகன் ராகவேந்திரனுக்கு 28 வயது, மூத்த மகன் பன்வாரி தாசுக்கு 72 வயது. இது வெறும் எழுத்துப் பிழை என தேர்தல் ஆணையம் தட்டிக்கழிக்குமா அல்லது பகிரங்கமாக மோசடி நடப்பதை ஒப்புக்கொள்ளுமா?’ என உத்தரப் பிரதேச காங்கிரஸ் தனது சமூக ஊடகப் பதிவில் கேள்வி எழுப்பியிருந்தது. இந்தக் குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை அறிய கள ஆய்வு மேற்கொண்டபோது, காங்கிரஸ் குறிப்பிட்ட முகவரி ஒரு தனிநபரின் வீடு அல்ல என்றும், அது ஆச்சார்யா ராம் கமல் தாஸ் என்பவரால் நிறுவப்பட்ட ராம் ஜானகி மடம் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து மடத்தின் தற்போதைய மேலாளர் ராம்பாரத் சாஸ்திரி விளக்கமளிக்கையில், ‘வாக்காளர் பட்டியல் உண்மையானதுதான்.

ஆனால், அதில் இருப்பது எங்களது நூற்றாண்டு பழமையான குரு-சீடர் மரபின் பிரதிபலிப்பு. எங்கள் மடத்தில் உலக வாழ்க்கையைத் துறந்து துறவறம் பூணும் சீடர்கள், தங்களது குருவையே தந்தையாகக் (வளர்ப்பு தந்தை) கருதுவார்கள். அவர்களின் அனைத்து அரசு ஆவணங்களிலும் தந்தை பெயருக்குப் பதிலாக குருவின் பெயரே இடம்பெறும். இது சட்டவிரோதமானது அல்ல; துறவிகள் தங்களது குருவின் பெயரை தந்தையின் பெயருக்குப் பதிலாகப் பயன்படுத்த கடந்த 2016ம் ஆண்டிலேயே ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எங்கள் மீது அவதூறு பரப்புவோரின் அறிவு தெளிய வேண்டும் என்பதற்காக மடத்தில் உள்ள துறவிகள் புத்தி சுத்தி யாகம் நடத்தினர்’ என்றார். மேற்கண்ட விளக்கத்தின் மூலம், காங்கிரஸ் கட்சி முன்வைத்த மோசடி குற்றச்சாட்டு, தேர்தல் ஆணைய அதிகாரிகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.