Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் எம்பிக்கள் சந்திப்பு: கோரிக்கை மனுக்களை அளித்தனர்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று காலை காங்கிரஸ் எம்பிக்கள் சந்தித்து பேசினர். அப்போது தொகுதி சார்ந்த கோரிக்கை மனுக்களை அளித்தனர். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் கடந்த 23ம் தேதி நடந்தது.

இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை தொடர்ச்சியாக சந்தித்து, அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும், அமைச்சர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைந்து கட்சி பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களை தவிர்த்து, குறைந்தது வாரத்தில் 4 நாட்கள் தங்கள் தொகுதியில் தங்கி மக்களை சந்தித்து, அவர்களுக்கான தேவையான பணிகளை செய்திட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், தங்கள் தொகுதியில் ஆற்றிய மக்கள் பணிகள், பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டு மக்களின் நலனை காத்திடும் வகையில் எடுத்துரைத்த கருத்துகள் ஆகியவை பற்றிய அறிக்கையை 15 நாட்களுக்கு ஒருமுறை தனக்கு அளித்திட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் எம்பிக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். அப்போது விஜய் வசந்த், ஜோதி மணி, விஷ்ணு பிரசாத், கோபிநாத், ராபர்ட் புரூஸ், சுதா உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் கலந்து கொண்டனர். மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உடன் இருந்தார். அப்போது காங்கிரஸ் எம்பிக்கள் தங்களுடைய தொகுதி சார்ந்த கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

மேலும் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. எம்பிக்கள் ெதாகுதியில் தங்கி மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான பணிகளை செய்ய வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து திமுக கூட்டணி எம்எல்ஏக்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று அப்போது வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி உடன் இருந்தார். தொடர்ந்து திமுக கூட்டணி எம்பிக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.