Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தவெக தலைவர் விஜய்யுடன் ரகசிய சந்திப்பு; காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரவீன் சக்ரவர்த்தி நீக்கம்?செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி

சென்னை: தவெக தலைவரை ரகசியமாக சந்தித்து பேசிய காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தியை கட்சியை விட்டு நீக்கும் நடவடிக்கையை மேலிடம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டுக்கு காங்கிரஸ் நிபுணர்கள் மற்றும் தரவு பகுப்பாய்வு குழுவின் அகில இந்திய தலைவரான பிரவீன் சக்ரவர்த்தி நேற்று முன்தினம் இரவு ரகசியமாக சந்தித்து பேசினார். இது காங்கிரசார் மத்தியில் புயலை கிளப்பியது.

டெல்லி அரசியல் செய்து வரும் பிரவீன் சக்ரவர்த்தி, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாருக்கும் தெரியாமல் தன்னந்தனியாக சென்று விஜய்யை சந்தித்தது தமிழக காங்கிரசார் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுதியது. அதன் பின்பு தான் அவர் தவெகவில் இணைவதற்காக விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற தகவல் வெளியானது. மயிலாப்பூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் டிமாண்ட் வைத்ததாக கூறப்படுகிறது.

இருவரது சந்திப்பு குறித்த தகவல் காங்கிரசார் மத்தியில் பற்றி எரியும் நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாருக்கும் தெரியாமல் சென்று வந்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை பிரித்து கொண்டு வருவதாகவும் விஜய்க்கு உறுதி அளித்து வந்த தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக காங்கிரசார் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற பல்வேறு வாக்குறுதிகளுடன் தவெகவில் இணைவதில் தீவிரம் காட்டும் பிரவீன் சக்ரவர்த்தியை கட்சியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று தமிழக காங்கிரசார் டெல்லி தலைமைக்கு புகார்களை தட்டி விட்டு வருகின்றனர். இதனால் பிரவீன் சக்ரவர்த்தியை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்பு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: தவெக தலைவர் விஜய்யை, பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்தது குறித்து எங்களுக்கு தெரியாது. கூட்டணி தொடர்பாக புறவாசல் வழியாக காங்கிரஸ் ஒருபோதும் பேசாது. காங்கிரஸ் நேர்வழியில்தான் செல்லும். விஜய்யுடன் பேசுங்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. விஜய்யை சந்திக்க பிரவீன் சக்ரவர்த்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை.

பேசவும் சொல்லவில்லை. அவர் விஜய்யை சந்தித்தது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சிக்கு எதுவும் தெரியாது. அவர் சந்தித்தது உண்மை என்று தெரியவந்தாலோ அல்லது அவர் எங்களிடம் விஜய்யை சந்தித்ததாகச் சொன்னாலோ, மேலிடத்துக்கு தகவல் தெரிவிப்போம். அதன்பிறகு அவர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி மேலிடம் முடிவு செய்யும். இந்தியா கூட்டணி வலிமையாகவும், ஒற்றுமையாகவும் உள்ளது. இந்த கூட்டணியை சிதைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.