விபத்தில் இறந்த துணிக்கடை உரிமையாளர் குடும்பத்திற்கு ரூ. 75 லட்சம் நஷ்டஈடு: கடலூர் நீதிமன்றம் உத்தரவு
கடலூர்: விபத்தில் இறந்த துணிக்கடை உரிமையாளர் குடும்பத்திற்கு ரூ. 75 லட்சம் நஷ்டஈடு வழங்க கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் வேளங்கிபட்டு சேர்ந்தவர் சங்கர் (45). நெய்வேலி டவுன்ஷிப்பில் துணிக்கடை நடத்தி வந்தார் . கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி நெய்வேலி இந்திரா காந்தி சாலையில் சங்கர் தனது மகள் மதிவதனியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிளும், சங்கர் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் எதிர்பாராமல் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சங்கர் மற்றும் அவரது மகள் மதிவதனி ஆகியோர் காயம் அடைந்து குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர் ஆனால் சங்கர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த சங்கரின் மனைவி சங்கீதா, மகன் ரஞ்சித் , மகள் மதிவதனி ஆகியோர் கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர்கள் மூலம் நஷ்ட ஈடு வழக்கு கடலூர் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் எண் 2 யில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இறந்த சங்கர் குடும்பத்தாருக்கு 53 லட்சத்து 23 ஆயிரம் மற்றும் 7.5 சதவீதம் வட்டி , செலவு தொகையுடன் என மொத்தம் ரூ. 75 லட்சம் நஷ்ட ஈடு வழங்க சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டார்.