கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் உறுப்பினர் தாக்கப்பட்ட வழக்கு; நஷ்டஈடு வழங்க வேண்டும் என்ற மனித உரிமை ஆணைய உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: சென்னை -சேலம் எட்டு வழி சாலைக்காக தமிழக அரசு நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்து கடந்த 2018 ஜூன் 26ம் தேதி செங்கம் அருகே நடந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு கடுமையாக தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, தன் மீதான தாக்குதல் மனித உரிமை மீறல் எனக்கூறி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் டில்லிபாபு தொடர்ந்த வழக்கில், மனித உரிமை ஆணையம் மனித உரிமை மீறல்களை உறுதி செய்து, செங்கம் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி மற்றும் இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து டிஎஸ்பி சுந்தரமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஹேமந்த் சந்தன் கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டனர்.