தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் ஊராட்சி, சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி வேண்டாமணி. இவர்களது மகன் முனீஸ்வரன்(19). திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை கண்ணன், மகன் முனீஸ்வரன் ஆகிய இருவரும் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று, வனப்பகுதியில் விட்டுள்ளனர். பின்னர் முனீஸ்வரன் சாத்தனூர் அணை தண்ணீர் தேங்கும் பகுதியான பெரிய மலை வேடியப்பன் கோயில் அருகே கை, கால்களை கழுவுவதற்காக நீரில் இறங்கினார்.
அப்போது, தண்ணீரில் இருந்து திடீரென வெளியே வந்த முதலை முனீஸ்வரனின் காலை கவ்வி நீருக்குள் இழுத்துச்சென்றது. இதனால் அலறி துடித்தார். தகவலறிந்த சாத்தனூர் அணை போலீசார், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் விரைந்து வந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் தேடினர். பின்னர், 100 மீட்டர் தொலைவில் உள்ள பாறைக்கு அருகே காலில் பலத்த காயங்களுடன் முனீஸ்வரன் சடலமாக கிடந்தார். சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மாணவன் சடலத்தை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. முதற்கட்ட விசாரைணயில், முனீஸ்வரன் உடலில் வேறு எங்கும் காயம் இல்லாத நிலையில், முதலை இழுத்து சென்றபோது நீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது.