சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை: தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின்கீழ் இயங்கி வரும் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசினர் சிறப்புப் பயிலகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களிடமிருந்து பணியிட மாறுதலுக்கான பொதுக் கலந்தாய்வு நடைபெற வேண்டுமென அரசுக்குக் கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.
நடப்பு ஆண்டில் மேற்கண்ட துறைகளின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வினை வெளிப்படைத் தன்மையுடன் இணைய வழியின் வாயிலாக மேற்கொள்ளலாம் என அரசு முடிவு செய்துள்ளது. வரும் 25ம் தேதிக்குள்ளாக வெளிப்படைத் தன்மையுடன் இணையவழியின் வாயிலாக மேற்கொள்ளுமாறு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.