கோவைக்கு 19ம்தேதி வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
திருச்சி: கோவைக்கு 19ம் தேதி வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், தொடர்ந்து டெல்லியில் காலவரையற்ற போராட்டம் நடத்த உள்ளதாகவும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, விவசாய சங்க தலைவர் நாகை காவிரி தனபாலன், தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி ஆகியோர் கூட்டாக நேற்று திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:
கர்நாடகாவில் இருந்து காவிரியில் தினமும் தண்ணீர் திறக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மரபணு திருத்தப்பட்ட பயிர்களை ஊக்குவிப்பதற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததற்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவைக்கு 19ம்தேதி வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தவுள்ளோம்.
விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தனிநபர் இன்சூரன்ஸ் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த திருச்சியில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் டெல்லி செல்ல உள்ளோம். டெல்லியில் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


