Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு வீல்சேர் வழங்காத ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

கோவை: கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (84). இவர் நீரிழவு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவரது வலது காலில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதற்காக அவர் தனது மகன் காளிதாஸ் என்பவருடன் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரது காலின் பாதம் பகுதியில் காயம் உள்ளதாலும், நீரிழிவு நோயின் தாக்கம் காரணமாக அவரது காலில் பாதம் பகுதியை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என அறிவுறுத்தினர்.

இதையடுத்து அவர் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றார். பின்னர், வீடு திரும்புவதற்காக தனது மகனுடன் தரை தளத்துக்கு வர அங்கு உள்ள சக்கர நாற்காலியை எடுத்து வரும் ஊழியரை அழைத்தார். ஆனால் அவர் தனக்கு வேறு ஒருவரை அழைத்து செல்ல வேண்டும். காத்திருங்கள் என கூறி சென்றதாக தெரிகிறது. மேலும், சக்கர நாற்காலியில் அழைத்து செல்ல ரூ.100 பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. 2 மணி நேரத்துக்கும் மேலாகியும் சக்கர நாற்காலி வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் காளிதாஸ் தந்தையை லிப்டில் தரைத்தளத்துக்கு அழைத்து வந்தார். அங்கு இருந்து வெளியே தோளில் போட்டு தூக்கிக்கொண்டும், தரதரவென இழுத்துக்கொண்டும் வந்தார். பின்னர் தனது தந்தையை ஆட்டோவில் ஏற்றி அழைத்து சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அதே நேரத்தில் சக்கர நாற்காலியில் சாப்பாட்டு கேரியர்களை எடுத்து செல்லும் வீடியோவும், மூதாட்டி ஒருவர் சக்கர நாற்காலி இன்றி தவித்த வீடியோவும் வெளியாகியது. இந்த விவகாரத்தில் சக்கர நாற்காலி வழங்காததை கண்காணிக்காத அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் எஸ்தர் ராணி மற்றும் மணிவாசகம் ஆகியோரை 5 நாட்கள் பணியிடை நீக்கம் செய்து அரசு மருத்துவமனை டீன் கீதாஞ்சலி உத்தரவிட்டார்.