கோவை: கோவை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மருத்துவமனைக்கு ஒரு நபர் சிகிச்சைக்காக தனது தந்தையை அழைத்து வந்துள்ளார். தந்தையால் நடக்க முடியாது என்பதால் அங்குள்ள பணியாளர்களிடம் வீல் சேர் கேட்டுள்ளார்.
அப்போது அங்குள்ள பணியாளர்கள் அதற்காக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை தோளில் சுமந்தபடி ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார். இதுதொடர்பான காட்சிகள் வைரலான நிலையில், சம்பவம் தொடர்பாக அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதனடிப்படையில் கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பணியாளர்கள் மாணிக்கவாசகம் மற்றும் எஸ்தர் ராணி ஆகியோர் 5 நாட்களுக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மருத்துவமனையில் போதுமான வீல் சேர் வசதிகள் இல்லை எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேவையான வீல் சேர்களை வாங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.