Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவையில் 3 வாலிபர்கள் செய்த கொடூரம் பலாத்காரத்துக்கு பின் மதில் சுவர் ஏறி குதித்து உதவி கேட்ட மாணவி: காதலன் உயிருடன் காப்பாற்றப்பட்டது எப்படி? திடுக் தகவல்

கோவை: கோவையில் 3 வாலிபர்களால் கொடூரமாக கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பின், மதில் சுவர் ஏறி குதித்து குடியிருப்புவாசிகளிடம் மாணவி உதவி கேட்டுள்ளார். அவர்கள் மாணவியை அரவணைத்து தைரியம் கொடுத்து உள்ளனர். அப்போது, காதலன் வெட்டப்பட்ட சம்பவத்தை சொல்லி, அவரை போலீசார் உதவியுடன் காப்பாற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கோவை சித்ரா சர்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் கடந்த 2ம் தேதி இரவு கோவையை சேர்ந்த காதலனுடன் மதுரையைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி காரில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் காதலனை அரிவாளால் வெட்டிவிட்டு மாணவியை மறைவான இடத்துக்கு தூக்கி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். தகவலறிந்து வந்த போலீசார் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது காதலனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

3 வாலிபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் உடல் சோர்வடைந்த மாணவி அரைகுறை ஆடையுடன் தட்டுத்தடுமாறி எழுந்தார். பின்னர் அந்த இடத்தில் இருந்த மதில் சுவரை ஏறி குதித்து அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியை நோக்கி சென்றார். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற அவர் ஒரு வீட்டின் கதவை தட்டினார். ஆனால் அந்த வீட்டில் இருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் கதவை திறக்கவில்லை. எனவே, மாணவி அந்த வீட்டின் காலிங் பெல்லை அடித்தார். ஆனால் அந்த பெல் வேலை செய்யவில்லை.

இதனால் மாணவி அந்த குடியிருப்பின் முதல் தளத்தில் உள்ள வீட்டிற்கு சென்று அந்த வீட்டின் கதவை தட்டினார். அப்போது அந்த வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்தனர். அலங்கோலமான நிலையில் நின்ற மாணவியை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது மாணவி தான் 3 வாலிபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டதை கூறி அழுதுள்ளார். இந்த நேரத்தில் அந்த குடியிருப்பில் இருந்த மற்ற குடும்பத்தினரும் அங்கு வந்தனர். அவர்கள் அனைவரும் மிகவும் சோர்ந்து காணப்பட்ட மாணவியை தைரியப்படுத்தினர். தற்போது நீ பாதுகாப்பாக இருக்கிறாய் என கூறி ஆறுதல் படுத்தியுள்ளனர். மாணவியின் நிலை கண்ட அவர்கள் உடை ஏற்பாடு செய்து அணியவைத்தனர். தனது பெற்றோரிடம் பேச வேண்டும் என்று மாணவி கூறியுள்ளார். இதையடுத்து அந்த மக்கள் பெற்றோருக்கு போன் போட்டு கொடுத்துள்ளனர். பெற்றோரிடம் பேசிய மாணவி நடந்ததை தெரிவித்துள்ளார்.

மாணவி தனது காதலனை வாலிபர்கள் தாக்கியதாக கூறி, அவரை காப்பாற்ற கூறியிருக்கிறார். இதையடுத்து அந்த பகுதி மக்கள் அனைவரும் மாணவியின் காதலனை தேடி சென்றனர். அதற்குள் போலீசார் அந்த இடத்துக்கு வந்து மாணவியின் ஆண் நண்பரை மீட்டு அவரிடம் விசாரித்துக்கொண்டிருந்தனர். அவரை சிகிச்சைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் இறங்கியிருந்தனர். மேலும் அவர்கள் மாணவியையும் தேடிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் அந்த மக்கள் மாணவி குறித்து தெரிவித்தனர். இதையடுத்து மாணவியை மீட்ட போலீசார் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

* நீதிபதி, ஆர்டிஓ விசாரணை

மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி (30), இவரது சகோதரர் காளி (எ) காளீஸ்வரன் (21), இவர்களது உறவினர், மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த குணா (எ) தவசி (20) ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர். துப்பாக்கிச்சூட்டில் கருப்பசாமி, குணாவின் இரு கால்களிலும், காளீஸ்வரனின் ஒரு காலில் குண்டு காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் பொது அறுவை சிகிச்சை வார்டுக்கு மாற்றப்பட்டனர்.

இதையடுத்து போலீசார் அவர்களை கோவை அரசு மருத்துவமனையில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்தனர். அதற்கான மனுவை போலீசார் கோர்ட்டில் சமர்பித்தனர். இதையடுத்து, கோவை ஜெ.எம்.2 நீதிபதி அப்துல் ரகுமான் நேற்றிரவு கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று, கைது செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மூன்று பேரிடமும் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேல் நேரில் விசாரணை நடத்தினார். பின்னர் வரும் 19ம் தேதி வரை நீதிமன்றம் காவலில் வைக்க நீதிபதி அப்துல்ரகுமான் உத்தரவிட்டார். இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் 3 பேரும் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். இந்நிலையில் கைதான 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும், 3 வாலிபர்களையும் மாணவி முன்பு அடையாள அணிவகுப்பு நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நீதிமன்றத்தில் விரைவில் மனுதாக்கல் செய்ய இருப்பதாகவும் போலீசார் கூறினர். முன்னதாக பாலியல் பலாத்காரம் சம்பவம் தொடர்பாக நேற்று காலை வடக்கு ஆர்டிஓ ராமகிருஷ்ணன், கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது காதலனிடம் நேரில் விசாரணை நடத்தினார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு கவுன்சலிங் வழங்கப்பட்டு வருகிறது. மாணவி சிகிச்சை பெறும் அறை முன் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

* சிக்க வைத்த செல்போன் லொகேஷன்: குற்றவாளிகளை காட்டி கொடுத்த மூன்றாம் கண்; தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

மாணவியை தூக்கி சென்று சுமார் 45 நிமிடம் மூவரும் கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதன் பின் மாணவி சுவர் ஏறி குதித்து குடியிருப்புவாசிகளிடம் உதவி கேட்டு போலீசாருக்கு தகவல் சென்றது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரையும் மீட்டனர். பலாத்காரத்தில் ஈடுபட்ட 3 வாலிபர்களும் தாங்கள் வந்த திருட்டு மொபட்டை போட்டுவிட்டு அவிநாசி சாலைக்கு நடந்து வந்துள்ளனர். பின்னர் நேரு நகர், காளப்பட்டி, சிட்ரா வழியாக நடந்து சென்று தப்பிக்க முயற்சித்தனர். போலீசார் 300க்கும் மேற்பட்ட கேமராக்களை ஆய்வு செய்தனர். குறிப்பாக, மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து வெளியே வர பொதுமக்கள் பயன்படுத்தும் 10 வழித்தடங்களில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது ஒரு வழித்தடத்தில் இருந்து 3 வாலிபர்கள் வெளியே வருவது பதிவாகி இருந்தது. அவர்கள் அந்த வழியாக வந்து அங்குள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துள்ளனர். சம்பவ இடத்தில் கிடைத்த திருட்டு மொபட் தொடர்பான விசாரணையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அந்த மொபட் 4 நாட்களுக்கு முன்பு கோவில்பாளையத்தில் திருடப்பட்டது என தெரியவந்தது. எனவே, அந்த மொபட் திருடப்பட்ட இடத்தில் கிடைத்த கேமரா காட்சியையும், பலாத்கார சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த கேமரா காட்சியையும் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது மொபட் திருடிச்சென்ற நபர்களும், பலாத்காரம் செய்யப்பட்ட் இடத்தில் இருந்து வந்த 3 பேரும் ஒரே நபர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் இருந்து மாணவியின் செல்போனையும், காதலனின் ஐபோனையும் பலாத்காரத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் திருடிச் சென்றனர். எனவே, போலீசார் அந்த செல்போன்களின் லொகேஷனை ஆய்வு செய்துகொண்டே இருந்தனர். சம்பவம் நடந்தது முதல் ஆப் செய்யப்பட்டிருந்த காதலனின் ஐபோன் 3ம் தேதி மதியம் ஆன் செய்யப்பட்டது. இதையடுத்து டவர் லொகேஷன் காட்டிய இடத்துக்கு போலீசார் சென்று விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர்கள் ஐபோனை ஒரு கடையில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. எனவே, போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இவ்வாறு பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவாகி இருந்த 3 பேரின் உருவத்தை தொழில்நுட்ப உதவியுடன் முக அடையாளம் கண்டனர்.

பின்னர் அந்த 3 பேரும் யார்? என்பது தொடர்பான விசாரணையில் போலீசார் இறங்கினர். இதற்காக பழைய குற்றவாளிகள், புதிய குற்றவாளிகன், சிறையில் இருந்து சமீபத்தில் வெளியே வந்த குற்றவாளிகள் ஆகியோரின் விவரங்களை ஆய்வு செய்தனர். அதை வைத்து இந்த 3 பேர் யார்? என்பதை கண்டுபிடித்தனர். அப்போது பாலியல் பலாத்காரம் செய்தது பழைய குற்றவாளிகளான சிவகங்கையை சேர்ந்த சதீஷ் என்கிற கருப்பசாமி, காளி என்கிற காளீஸ்வரன், மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த குணா என்கிற தவசி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்து சுட்டு பிடித்துள்ளனர்.