*காரில் ரகசிய அறை அமைத்தது அம்பலம்
பாலக்காடு : காரில் ரகசிய அறையை அமைத்து கோவையில் இருந்து கேரளாவிற்கு ரூ.1.31 கோடி ஹவாலா பணம் கடத்திய கேரளா ஆசாமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் வேலந்தாவளம் அருகே தமிழக எல்லையில் சித்தூர் டி.எஸ்.பி. அப்துல் முனீர் தலைமையில், போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தினர். அப்போது கோவையில் இருந்து கார் ஒன்று வேலந்தாவளம் வழியாக பாலக்காடு நோக்கி வந்தது.
அந்த காரை போலீசார் தடுத்து சோதனையிட்டனர். இதில் காரின் சீட்டிற்கு அடியில் ரகசிய அறையில் 500 ரூபாய் நோட்டுகள் கத்தை கத்தையாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் காரில் இருந்த ரூ.1 கோடியே 31 லட்சம் மதிப்பிலான பணத்தை பறிமுதல் செய்தனர்.
காரை ஓட்டி வந்த மலப்புரம் மாவட்டம் ராமபுரத்தைச் சேர்ந்த சுபி (47) என்பவரிடம் விசாரித்ததில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கடத்தி வரப்பட்ட ஹவாலா பணம் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பணத்தை பறிமுதல் செய்து, சுபியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

