Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவை வனப்பகுதிகளில் இருந்த 1250 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

கோவை : கோவை வனப்பகுதியில் இருந்த 1250 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கடந்த 2 நாட்களாக வனத்துறையினர் அகற்றி உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் வனப்பகுதிகளில் உள்ள குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை வனத்துறையினர் தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் இணைந்து அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவையில் தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷ் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில், கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்றும், நேற்று முன் தினமும் தூய்மை பணிகள் நடைபெற்றன.

இதில் கோவை வனச்சரகர் திருமுருகன் தலைமையிலான வனப்பணியாளர்கள், தன்னார்வ அமைப்பினர், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். அப்போது மாங்கரை - ஆனைக்கட்டி சாலையில் 600 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளும், பொன்னூத்து அம்மன் கோயில் பகுதியில் 250 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளும், மருதமலை கோயில் பகுதியில் 400 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளும் அகற்றப்பட்டன.

மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தும், மாற்றுப்பொருட்களை பயன்படுத்துமாறும் கூறி விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.

இதேபோல மருதமலை சாலையில் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என்ற ஆங்கில வார்த்தைகளின் வடிவத்தில் தன்னார்வலர்களும், மாணவர்களும் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.