Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்; நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படும் 3 வாலிபர்களை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு

கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேரும் நீதிபதி முன் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். கோவை சித்ரா சர்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் கடந்த 2ம் தேதி இரவு மதுரையை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவியும், ஒண்டிப்புதூரை சேர்ந்த மெக்கானிக்காக பணிபுரிந்து வரும் தனது 25 வயது ஆண் நண்பரும் காரில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது ஒரே மொபட்டில் வந்த 3 வாலிபர்கள், ஆண் நண்பரை அரிவாளால் தலையில் தாக்கிவிட்டு மாணவியை இழுத்து சென்று பலாத்காரம் செய்தனர். தகவலறிந்து போலீசார் விரைந்து சென்று ஆண் நண்பரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவியும் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்களை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில், சம்பவ இடத்தில் ஒரு திருட்டு மொபட் கண்டுபிடிக்கப்பட்டது. அதை வைத்தும், 300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் கடந்த 3ம் தேதி இரவு துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பகுதியில் பதுங்கியிருந்த 3 பேரையும் பிடிக்க போலீசார் முயன்றனர். அப்போது ஆயுதங்களால் தாக்கினர். இதில் போலீஸ்காரர் சந்திரசேகர் காயமடைந்தார். அதனால் தற்காப்பு நடவடிக்கையாக துப்பாக்கியால் சுட்டு 3 வாலிபர்களையும் போலீசார் சுட்டுப்பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி (30), காளி (எ) காளீஸ்வரன் (21), மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த குணா (எ) தவசி (20) என தெரியவந்தது. இவர்களில் சதீஷ், காளீஸ்வரன் சகோதரர்கள். இவர்களது தூரத்து உறவினர்தான் குணா. துப்பாக்கிச்சூட்டில் கருப்புசாமி, குணாவின் இரு கால்களிலும், காளீஸ்வரனின் ஒரு காலில் குண்டு காயங்கள் ஏற்பட்டது. அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, நேற்று பொது அறுவை சிகிச்சை வார்டுக்கு மாற்றப்பட்டனர்.

இதையடுத்து 3 பேரையும் கோவை அரசு மருத்துவமனையில் இன்று நீதிபதி முன் போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர். பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட உள்ளனர். தொடர்ந்து 3 வாலிபர்களையும் மாணவி முன்பு அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்காக நீதிமன்றத்தில் விரைவில் மனுதாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மாணவி, ஆண் நண்பரிடம் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக இன்று காலை வடக்கு ஆர்டிஓ ராமகிருஷ்ணன் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவர் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது ஆண் நண்பரை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார்.

மதில் சுவர் ஏறி குதித்து உதவி கேட்ட மாணவி

வாலிபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் உடல் சோர்வடைந்த மாணவி அரைகுறை ஆடையுடன் தட்டுத்தடுமாறி எழுந்தார். பின்னர் அங்கிருந்து மதில் சுவரை ஏறி குதித்து அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியை நோக்கி சென்றார். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கதவை தட்டினார். அங்கிருந்தவர்கள், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் கதவை திறக்கவில்லை. ஹாலிங் பெல்லை அடித்தும் வேலை செய்யவில்லை. அதனால் அந்த குடியிருப்பின் முதல் தளத்தில் உள்ள வீட்டிற்கு சென்று கதவை தட்டினார். அங்கிருந்தவர்கள் வெளியே வந்தனர். அலங்கோலமாக நின்ற மாணவியை பார்த்து அதிர்ச்சியடைந்து, சம்பவத்தை கேட்டறிந்தனர். சிறிது நேரத்தில் அந்த குடியிருப்பில் இருந்த மற்ற குடும்பத்தினரும் வந்தனர். அனைவரும், மாணவியை தைரியப்படுத்தினர். தற்போது நீ பாதுகாப்பாக இருக்கிறாய் என கூறி ஆறுதல்படுத்தியுள்ளனர்.

பின்னர், அவருக்கு மாற்று உடை அணிவித்தனர். இதையடுத்து மாணவியின் விருப்பத்தின் பேரில் பெற்றோரிடம் செல்போனில் பேச வைத்துள்ளனர். அவரும் நடந்ததை தெரிவித்துள்ளார். அவர்கள் அதை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து மாணவி, தனது ஆண் நண்பரை வாலிபர்கள் தாக்கியதாக கூறி, அவரை காப்பாற்ற கூறியிருக்கிறார். உடனே அவர்களும் அப்பகுதி முழுவதும் தேடினர். அதற்குள் போலீசார் விரைந்து வந்து ஆண் நண்பரை மீட்டு விசாரித்தனர். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரும், மாணவியை தேடி கொண்டிருந்த நேரத்தில், அவரது நிலை குறித்து பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.