Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதல்வரின் சமூக நீதி 2.0 எதிர்காலத்தை கட்டமைக்கும் அரசியல் தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னோடி மாநிலமாக உயர்த்தும் சிந்தனை; திமுக தலைமை புதிய வீடியோ வெளியீடு: லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவபடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறக்கிறார்

சென்னை: தமிழ்நாட்டிற்கு சர்வதேச முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மன், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இறுதி செய்து வருகிறார். இந்நிலையில், லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறும் கருத்தரங்கில் பெரியாரின் உருவ படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரையாற்ற உள்ளார். இந்நிலையில், திமுக தலைமை அலுவலகம் தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பதிவில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:

சமூக நீதி என்பது வெற்று அரசியல் கோஷமல்ல, அது தமிழ்நாடு அரசியலின் உயிர் நாடி. சாதி, மதம், பாலின பாகுபாடு அற்ற சமத்துவ சமுதாயத்தை அமைக்க கனவு கண்டார் தந்தை பெரியார். அவரின் கனவை இன்று எல்லார்க்கும் எல்லாம் என்ற உயரிய கொள்கை மூலம் நனவாக்கி நடைமுறைப்படுத்தி கொண்டுருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் வரையறுத்த சமூக நீதி 1.0. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை சிந்தனையாக மாறியது. நம் திராவிட மாடல் ஆட்சியினை சமூக நீதி 2.0 என்று அழைக்கும் அளவுக்கு பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெரியார் கண்ட கனவு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் நனவாகி வருகிறது. நான் பெரியாரின் பேரன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சொல்வது சாதாரண வார்த்தை அல்ல.

திராவிட மாடல் நல்லாட்சியில் பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றுவதால் வெளிப்படும் உணர்வுபூர்வமான சத்திய வார்த்தை. கோடிக்கணக்கான பெண்களை பொருளாதார ரீதியாக உயர்த்தவும் அவர்களின் சுய மரியாதையை காக்கவும் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. பெண்களின் முன்னேற்றத்திற்கான கட்டணமில்லா விடியல் பேருந்து பயணம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசு ஆவணங்களில் காலனி என்ற வார்த்தையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏழை மாணவர்களுக்கான விகுதிகள் அனைத்தும் சமூக நீதி விகுதிகள் என்று பெயரிடப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கிய சமூக நீதி கண்காணிப்பு குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, மகளிர் உரிமை ஆகிய துறைகளில் சமூக நீதி முழுமையாக செயல்படுத்த உறுதி செய்கிறது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை ஒட்டி, செப்டம்பர் 4ம்தேதி அன்று உலக புகழ் பெற்ற லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில் பெரியாரின் உருவ படத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றவுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உருவாகியுள்ள சமூக நீதி 2.0 எதிர்காலத்தை கட்டமைக்கும் அரசியல். தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னோடி மாநிலமாக, முதல் மாநிலமாக, உயர்த்தும் சிந்தனையே முதல்வரின் சமூக நீதி 2.0. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.