இமாச்சலில் மீண்டும் மேகவெடிப்பு: பைக், கார்கள் அடித்துச்செல்லப்பட்டன; வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்
சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் நேற்று அதிகாலை பல இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கனமழையில் ஏராளமான வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டன. இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் ஜூன் 20 அன்று மாநிலத்தில் பருவமழை தொடங்கியதிலிருந்து பல முறை மேகவெடிப்புகள் ஏற்பட்டு பேரிடர் ஏற்பட்டுள்ளது. மழை தொடர்பான பாதிப்புகளில் இதுவரை மொத்தம் 386 பேர் இறந்துள்ளனர். இதுவரை இமாச்சல் முழுவதும் ரூ.4,465 கோடி இழப்பை சந்தித்துள்ளது. சமீபத்தில் இமாச்சல் சேதத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, ரூ.1500 கோடி நிதி உதவி அளிப்பதாக அறிவித்தார்.
இந்த சூழலில் நேற்று அதிகாலையும் இமாச்சலில் மேகவெடிப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிலாஸ்பூர் மாவட்டத்தில் நம்ஹோல் பகுதியில் உள்ள குத்ரஹான் கிராமத்தில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் அந்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பல வாகனங்கள் இடிபாடுகளில் புதைந்தன. இருப்பினும் உயிர் சேதம் எதுவும் பதிவாகவில்லை. சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தனர்.
போக்குவரத்தை சீக்கிரம் மீட்டெடுக்க பொதுப்பணித் துறை இடிபாடுகளை அகற்றத் தொடங்கியுள்ளது. சம்பா மாவட்டத்தில் உள்ள பட்டியாத் சட்டமன்றத் தொகுதியின் மாமல் மற்றும் கம்லாரி கிராமங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் மற்றும் குப்பைகள் புகுந்தன. தேசிய நெடுஞ்சாலை-3 இன் அட்டாரி-லே பகுதி, ஆட்டோ-சைஞ்ச் பகுதி, அமிர்தசரஸ்-போட்டா பகுதி உட்பட மொத்தம் 577 சாலைகளில் போக்குவரத்து முடங்கியது. இதனால் இமாச்சலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.