தூய்மை பணியின் போது கண்டெடுத்த தங்கச் சங்கிலியை போலீசில் ஒப்படைத்த தூய்மை பணியாளர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு
சென்னை: சென்னை ராயபுரம், காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். பெயிண்டர். இவரது மனைவி கிளாரா (39), திருவான்மியூர் பகுதி 180வது வார்டில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்த தம்பதியினருக்கு சூசைமேரி (18), சுவாதி (13), நிக்கிதாஸ்ரீ (10) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கிளாரா திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான, மருந்தீஸ்வரர் திருமண மண்டபத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டபோது கீழே கிடந்த 1 பவுன் தங்கச் சங்கிலியை கண்டெடுத்து நேற்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இந்த செய்தியை அறிந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கிளாராவை குடும்பத்துடன் தனது முகாம் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டினார். மேலும் புத்தாடையும், திமுக இளைஞரணி அறக்கட்டளையின் சார்பில் வெகுமதியும் வழங்கி, அவரது நேர்மையான பணிக்கு வாழ்த்து தெரிவித்தார். துப்புரவு பணியாளர் கிளாரா குடும்பத்தினருடன் உரையாடிய உதயநிதி ஸ்டாலின், லண்டனில் இருந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னை அழைத்து, பாராட்டு தெரிவிக்குமாறு தெரிவித்தார் என்றார். தமிழ்நாடு திரும்பியதும், உங்களை நேரில் சந்திக்க ஆர்வமாக இருப்பதாகவும், உதயநிதி கூறினார்.