சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு சோதனை விவகாரம் அமலாக்கத்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உதவி இயக்குனர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
சென்னை: சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்களை பறிமுதல் செய்தது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது. உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஆகாஷ் பாஸ்கரனிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு அதிகாரி நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து, அமலாக்கத்துறை மீது ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் விகாஸ் குமார் செப்டம்பர் 17ம் தேதி நேரில் ஆஜராகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே, காணொலி மூலம் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, பதில் மனுதாக்கல் செய்யாததற்காக முப்பது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.