சின்சினாட்டி: அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டங்கள் நடந்தன. மகளிர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியடெக் (24 வயது, 3வது ரேங்க்), இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவோலினி (29 வயது, 5வது ரேங்க்) மோதினர்.
முதல் செட்டை இகா 7-5 என்ற புள்ளிக் கணக்கில் போராடி கைப்பற்றினார். தொடர்ந்து 2வது செட்டையும் பவோலினியின் சவால்களை சமாளித்து 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். அதனால் ஒரு மணி 49 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் 2-0 என நேர் செட்களில் வென்ற இகா முதல் முறையாக சின்சினாட்டி ஓபன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
* பாதியில் வெளியேறிய சின்னர் அல்காரஸ் வின்னர்
சின்சினாட்டி ஓபன் ஆடவர் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் (22 வயது, 2வது ரேங்க்), நடப்பு சாம்பியன், இத்தாலியின் ஜானிக் சின்னர் (24 வயது, 1வது ரேங்க்) களமிறங்கினர். கார்லோசின் சர்வீஸ்களை சமாளித்து புள்ளிகள் சேர்க்க முடியாமல் சின்னர் தடுமாறினார். உடல் நிலை பாதிப்பால் சின்னர் தடுமாறிய நிலையில், சுறுசுறுப்புடன் ஆடிக் கொண்டிருந்த கார்லோஸ் முதல் செட்டில் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தார்.
அப்போது உடல் நிலை பாதிப்பு காரணமாக வெளியேறுவதாக சின்னர் அறிவித்தார். அதனால் 23 நிமிடங்களில் முடிந்த ஆட்டத்தில் கார்லோஸ் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டார். எனவே கார்லோஸ் முதல் முறையாக சின்சினாட்டி ஓபன் சாம்பியன் கோப்பையை வசப்படுத்தினார். தொடர்ந்து 26 கடினத் தரை போட்டிகளில் வென்ற சின்னரின் வெற்றிப் பயணம் சின்னாட்டியில் முடிவுக்கு வந்துள்ளது.