Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிறிஸ்துமஸ் பண்டிகை, அரையாண்டு விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை, அரையாண்டு விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இதனால், ரயில்களில் எப்போது கூட்ட நெரிசல் அதிகமாகவே காணப்படும். குறிப்பாக, பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் சொல்லவே தேவையில்லை. அந்த அளவுக்கு ரயில்களில் கூட்டம் அலைமோதும்.

அதோடு இல்லாமல், பண்டிகை காலங்களில் ரயில்களில் டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. இதனால், கடைசி நேரங்களில் பயணிகள் தட்கலில் டிக்கெட் புக் செய்கின்றனர். ஆனால், அதுவும் சில பயணிகளுக்கு கேன்சல் செய்யப்பட்டு வருகிறது. எனவே, பண்டிகை நாட்களில் முன்கூட்டியே டிக்கெட் புக் செய்வது நல்லது. இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை, அரையாண்டு விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது.கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறையும் விடப்படுகிறது. இதனால், பயணிகள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

எனவே, பண்டிகை நாட்கள், அரையாண்டு விடுமுறைக்காக ரயில்கள் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். எனவே, கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறையொட்டி, இன்று காலை 8 மணியளவில் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் வசதிக்காக டிசம்பர் 22ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஐஆர்சிடிசி இணையதளம் வழியாகவும், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாகவும் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் தென்மாவட்டம் செல்லும் கன்னியாகுமரி, அனந்தபுரி போன்ற ரயில்களில் டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்தன. நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆர்ஏசிக்கு வந்துவிட்டது. பொதிகை, முத்துநகர், கொல்லம், குருவாயூர், செந்தூர் போன்ற தென்மாவட்ட ரயில்களில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டிசம்பர் 24ம் தேதி சொந்த ஊர் செல்பவர்கள் இன்றும், டிசம்பர் 25 ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று சொந்த ஊர் செல்பவர்கள் நாளை 26ம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.மேலும், முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பதிவு செய்பவர்கள் ஐஆர்சிடிசி இணையதளத்தில் புறப்படும் இடம், சென்று சேரும் இடம், தேதி ஆகியவற்றை தேர்வு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு செய்யும்போது அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்று தேவைப்படும். ஆதார் அடையாள அட்டையை முன்பதிவு செய்யும்போது உடன் வைத்திருக்க வேண்டும். பயணிகளின் பெயர்கள், வயது, பாலினம் போன்ற விவரங்கள் பூர்த்தி செய்த பின்னர், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது வேறு ஏதேனும் ஆன்லைன் கட்டண முறை மூலம் பணம் செலுத்தலாம்