சோழவந்தான் / உசிலம்பட்டி : சோழவந்தான் பேரூராட்சி மற்றும் உசிலம்பட்டி நகராட்சியில் வார்டு வாரியாக கவுன்சிலர்கள் தலைமையில் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது.
சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. தமிழக அரசு பொதுமக்களின் குறைகளை ஒவ்வொரு வார்டு பகுதியிலும் அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் சிறப்பு கூட்டம் நடத்தி, அதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து ஒரு நாளுக்கு 6 வார்டுகள் வீதம் மூன்று நாட்கள் இக்கூட்டம் நடத்தப்படும் என, சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. இதன்படி நேற்று 1வது வார்டு பேட்டையில் நடைபெற்ற கூட்டத்திற்கு கவுன்சிலர் ஈஸ்வரி ஸ்டாலின் தலைமை வகித்தார்.
பேரூராட்சி தலைவர் ஜெயராமன், துணை தலைவர் லதா கண்ணன், செயல் அலுவலர் செல்வக்குமார், துப்புரவு ஆய்வாளர் ஜெஸி, பேரூராட்சி அலுவலர் கண்ணம்மாள் ஆகியோர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
இதில் திரளாக கலந்து கொண்ட பொதுமக்கள் பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகளை முன் வைத்தனர். அவை விரைவில் நிறைவேற்றித் தரப்படும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் உறுதியளித்தனர் .
இதே போல் 2வது வார்டில் முத்துச் செல்வி சதீஷ்குமார், 7வது வார்டில் கணேசன், 8வது வார்டில் மருதுபாண்டியன், 13வது வார்டில் வள்ளி மயில், 14 வது வார்டில் நிஷா கௌதமராஜா ஆகிய கவுன்சிலர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இன்று (அக்.28) 3, 4, 9, 10, 15, 16 ஆகிய வார்டுகளிலும், நாளை 5, 6, 11, 12, 17, 18 ஆகிய வார்டுகளில் கவுன்சிலர்கள் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அந்தந்த வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதி சம்மந்தமான கோரிக்கைகளை தெரிவிக்குமாறு பேரூராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தி உள்ளனர்.இதேபோல், உசிலம்பட்டி நகராட்சியில் 1 முதல் 12வரை உள்ள வார்டுகளுக்கு கவுன்சிலர்கள் தலைமையிலான சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் உசிலம்பட்டி நகர்மன்ற தலைவர் சகுந்தலா, நகராட்சி ஆணையாளர் இளவரசு, 5வது வார்டு கவுன்சிலர் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மக்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.
பொதுமக்கள் வடிகால் வசதி, வார்டு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், முறையாக குடிநீர் விநியோகம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த பிரச்னைகள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
