சென்னை: மாமன்னர் இராசேந்திர சோழனின் பிறந்தநாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணிகளும், சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படுவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:
கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் எனப் பெரும்புகழ் எய்திய தமிழ் மாமன்னர் இராசேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையை அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடிட 2021-ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது நமது திராவிட மாடல் அரசு.
அவரது தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழப் பேரரசின் வரலாற்றுச் சிறப்புகளையும் கடல் கடந்த வணிகத் தொடர்புகளையும் பறைசாற்றும் விதமாக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்து, அதற்கும் கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினேன். காண்போரைக் கவர்ந்திடும் வண்ணம் அது எழுந்து வருகிறது.
இவற்றின் தொடர்ச்சியாக, இராசேந்திர சோழனின் பிறந்தநாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணிகளும் - சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.