2015ல் சித்தூர் மேயர் அனுராதா, அவரது கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கு: 5 பேருக்கு மரண தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
ஆந்திரா : 2015ல் சித்தூர் மேயர் அனுராதா, அவரது கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து சித்தூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேயர் அலுவலகத்தில் புகுந்த கும்பல் அனுராதா, அவரது கணவர் கட்டாரி மோகன் நாயுடுவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. இரட்டை கொலை வழக்கில் கட்டாரி மோகன் அக்காள் மகனும் பலிஜா நாயுடு சேனா இயக்க நிர்வாகியுமான சிண்டு நாயுடு கைது செய்யப்பட்டார். பல ஆண்டுகால முன்பகையால் அனுராதா, கட்டாரி மோகன் நாயுடு கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இரட்டை கொலை வழக்கில் மொத்தம் 21 பேர் கைது செய்யப்பட்டு 122 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கு இன்று சித்தூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சீனிவாசராவ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட மேலும் 18 பேரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார். கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சந்திரசேகர் என்ற சிண்டு, முல்பாகல் வெங்கடேஷ், ஜெயப்பிரகாஷ் ரெட்டி, மஞ்சுநாத், வெங்கடேஷுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
 
  
  
  
   
