சிப்காட் - சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ரூ.574 கோடி முதலீட்டில் ஈக்வினிக்ஸ் நிறுவனத்தின் தகவல் தரவு மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை: சிப்காட் - சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ரூ.574 கோடி முதலீட்டில் ஈக்வினிக்ஸ் நிறுவனத்தின் தகவல் தரவு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்துவதற்கும் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், உயர் தொழில்நுட்ப திட்டங்களை ஈர்த்து அதன்மூலம் உயர் ஊதிய வேலைவாய்ப்புகளை பெருமளவில் உருவாக்கிடவும், தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தகவல் தரவு மையத்தின் முக்கிய நகரமாக சென்னை பெரும் வளர்ச்சி பெற்று வரும் நிலையில், பல்வேறு நிறுவனங்களின் புதிய தரவு மையங்கள் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட ஈக்வினிக்ஸ் நிறுவனம், உலகளாவிய வணிகங்களுக்கான சர்வதேச இணைப்பு தீர்வுகள் அளித்திடும் முன்னணி டிஜிட்டல் உள்கட்டமைப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். உலக அளவில், பல்வேறு நாடுகளில், தரவு மையங்களை இந்நிறுவனம் நிறுவி செயல்படுத்தி வருகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தலைமுறை தொழில்நுட்பங்களுக்கு உகந்த உள்கட்டமைப்பை வழங்கும் நோக்கில் ஈக்வினிக்ஸ் நிறுவனம், சிப்காட் சிறுசேரியில் ஒரு நவீன தகவல் தரவு மையத்தை உருவாக்கியுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இத்தரவு திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அன்றைய தினமே, இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதன் தொடர்ச்சியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிப்காட் சிறுசேரி தொழில்நுட்ப பூங்காவில் ஈக்வினிக்ஸ் நிறுவனம் ரூ.574 கோடி முதலீட்டில் அமைத்துள்ள தகவல் தரவு மையத்தை சென்னை தலைமை செயலகத்தில் நேற்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குப்பு மற்றும் வர்த்தக துறை செயலாளர் அருண் ராய், வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் மருத்துவர் அலர்மேல்மங்கை, ஈக்வினிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மனோஜ் பால், துணைத்தலைவர் பால் வாக்கர் மற்றும் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.