* சிட்னி தண்டர் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்
சிட்னி: சிஎஸ்கே அணியில் இருந்து விலகிய தமிழகத்தை சேர்ந்த சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், பிக் பாஷ் லீக் தொடரில் இடம்பெற்றுள்ள சிட்னி தண்டர் அணியில் சேர உள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது. ஐபிஎல் போட்டிகளை போல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக்கில் இடம்பெறும் புகழ் பெற்ற முதல் இந்திய வீரர் அஸ்வின். 39 வயதாகும் அஸ்வின், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. அஸ்வின் தங்கள் அணியில் சேர்ந்துள்ளது குறித்து, சிட்னி தண்டர் அணி நிர்வாகம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* காமன்வெல்த் போட்டிகள் அகமதாபாத்தில் நடக்குமா?
லண்டன்: வரும் 2030ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்து, இந்தியாவை சேர்ந்த குழு, லண்டனில் உள்ள காமன்வெல்த் விளையாட்டுகள் மதிப்பீட்டு குழுவிடம் முறைப்படி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷா தலைமையில் சென்ற அந்த குழு, அகமதாபாத்தில் காமன்வெல்த் போட்டிகளை நடத்தலாம் என தெரிவித்துள்ளது. காமன்வெல்த் போட்டிகள் இயக்கம் துவங்கி 100 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், 2030ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகின்றன.
* யுஎஸ் கிரிக்கெட் கவுன்சிலை சஸ்பெண்ட் செய்த ஐசிசி
லண்டன்: ஐசிசி விதிகளை மீறியதாக பல முறை எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, அமெரிக்க கிரிக்கெட் கவுன்சில் பிரதிநிதித்துவத்தை ஐசிசி சஸ்பெண்ட் செய்துள்ளது. இருப்பினும், அமெரிக்க கிரிக்கெட் அணி, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 2028ல் நடக்கவுள்ள, ஒலிம்பிக் போட்டிகள் உட்பட பிற கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதில் அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு சிக்கல் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2026 பிப்ரவரியில், இந்தியா, இலங்கையில் நடக்கவுள்ள ஆடவர் உலகக் கோப்பை டி20 போட்டிகளிலும் அமெரிக்க கிரிக்கெட் அணி பங்கேற்கும் என கூறப்படுகிறது.