* ஸ்குவாஷ் செமிபைனலில் தமிழகத்தின் ராதிகா
சிட்னி: என்எஸ்டபிள்யு ஓபன் ஸ்குவாஷ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த காலிறுதிப் போட்டி ஒன்றில் தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய வீராங்கனை ராதிகா சுதந்திர சீலன் (24), ஆஸி வீராங்கனை கரேன் புளூமை எதிர்கொண்டார். வெறும் 22 நிமிடங்களே நடந்த இந்த போட்டியில் அற்புதமாக ஆடிய ராதிகா, 11-8, 11-7, 11-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடினார். இதன் மூலம் அரை இறுதிச் சுற்றுக்குள் அவர் எளிதில் நுழைந்தார். ஆடவர் பிரிவில் நடந்த போட்டியில் எகிப்து வீரர் முகம்மது ஷரப்புடன் மோதிய இந்திய வீரர் வீரர் சோத்ரானி, 11-7, 10-12, 11-5, 11-8 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
* 6 பந்தில் 6 அஃப்ரிடி அதிரடி
ஹாங்காங்: ஹாங்காங் நகரில், 6 ஓவர்கள் மட்டும் கொண்ட ஹாங்காங் சிக்சஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டி ஒன்றில் குவைத் அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி மோதியது. அப்போது குவைத் அணிக்காக ஆடிய யாஸின் படேல் வீசிய ஒரு ஓவரை எதிர்கொண்ட பாக். வீரர் அப்பாஸ் அஃப்ரிடி 6 பந்துகளையும் சிக்சருக்கு பறக்க விட்டு சாதனை படைத்தார். மொத்தம் 12 பந்துகளை எதிர்கொண்ட அவர் 55 ரன்களை குவித்தார். 124 ரன் இலக்கை நோக்கி ஆடிய பாக். அணி, போட்டியின் கடைசி பந்தில் 124வது ரன்னை எடுத்து, பரபரப்பான ஆட்டத்தில் வெற்றியை பதிவு செய்தது.
* மெஸ்ஸி தலைமையில் அங்கோலாவுடன் மோதல்
லுவாண்டா: கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, அங்கோலா நாட்டு அணியுடன் நட்பு ரீதியிலான கால்பந்தாட்ட போட்டியில் ஆட உள்ளது. வரும் 14ம் தேதி லுவாண்டாவில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணி மேலாளர் லியோனல் ஸ்கலோனி நேற்று வெளியிட்டார். அர்ஜென்டினா அணி பற்றிய அறிவிப்பில் லியோனல் மெஸ்ஸி தலைமையில் 24 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில், கியான்லுகா பிரெஸ்டியானி, ஜோகுயின் பனிசெலி, மேக்சிமோ பெரோன் ஆகிய 3 அறிமுக வீரர்களும் உள்ளனர்.

