* அபிஷேக் சர்மா சிக்சரில் சாதனை
துபாய்: பாகிஸ்தான் அணியுடனான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா, முதல் பந்தை சிக்சருக்கு பறக்க விட்டார். 2வது முறையாக, இன்னிங்சின் முதல் பந்தில் சிக்சர் அடித்துள்ள அபிஷேக், டி20யில் அதிக முறை முதல் பந்தில் சிக்சர் அடித்த இந்தியர் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளார். அந்த போட்டியில் அபிஷேக் 5 சிக்சர்கள் விளாசினார். அதன் மூலம், டி20 போட்டிகளில் 50வது சிக்சரை எட்டியுள்ளார். தவிர, டி20யில், குறைந்த பந்துகளில் (331 பந்துகள்) 50 சிக்சர் விளாசிய வீரர் என்ற சாதனையையும் அபிஷேக் அரங்கேற்றி உள்ளார். இந்த பட்டியலில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லூயிஸ் (366 பந்துகள்) 2ம் இடத்தில் உள்ளார்.
* ஓய்வு அறிவிப்பை வாபஸ் பெற்றார்: குவின்டன் டிகாக்
ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்கா விக்கெட் கீப்பர் குவின்டன் டிகாக், சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார். அந்த முடிவை வாபஸ் பெறுவதாக அவர் தற்போது அறிவித்துள்ளார். இதையடுத்து, ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் மீண்டும் அவர் தென் ஆப்ரிக்கா நாட்டு அணிக்காக ஆடவுள்ளார். கடந்த ஜூன் மாதம் பார்படோஸில் நடந்த, டி20 உலகக் கோப்பை போட்டியின்போது, கடைசியாக, தென் ஆப்ரிக்கா அணிக்காக குவின்டன் டிகாக் ஆடியிருந்தது குறிப்பிடத்ததக்கது.
* பவுமாவுக்கு தசைப்பிடிப்பு: தெ.ஆ. கேப்டன் மார்க்ரம்
இஸ்லாமாபாத்: தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. வரும் அக். 12ம் தேதி முதல் போட்டி துவங்கவுள்ள நிலையில், தென் ஆப்ரிக்கா அணி கேப்டன் டெம்பா பவுமா கால் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வருகிறார். அவர், 8 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். எனவே, பாக். உடனான டெஸ்ட் தொடரில் டெம்பா பவுமா பங்கேற்க மாட்டார். அவருக்கு பதில், அய்டன் மார்க்ரம் தென் ஆப்ரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.