ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 55 வயது பெண் தனது 17வது குழந்தையை பெற்றெடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டம் ஜாடோல் தொகுதியில் லிலாவாஸ் கிராமத்தை சேர்ந்த 55 வயது பெண் ரேகா. இவரது கணவர் கவரா ராம் கல்பேலியா. இந்த தம்பதிக்கு தற்போது 16 குழந்தைகள். இதில் 4 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் இறந்து விட்டது. தற்போது 7 மகன்கள், 5 மகள்கள் என 12 பேர் உள்ளனர். இதில் 2 மகன், 3 மகள்களுக்கு திருமணமாகி ஒவ்வொரு தம்பதிக்கும் 2 அல்லது 3 குழந்தைகள் உள்ளனர். மகன்கள், மகள்கள் வழியாக பேரக்குழந்தை பெற்ற நிலையில் ரேகா திடீரென கர்ப்பமானார். ஆக.24 அன்று ஜாடோல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு 17வது குழந்தை பிறந்துள்ளது. ரேகாவைப் பார்க்க உறவினர்கள், அண்டை வீட்டார் மற்றும் ஆர்வமுள்ள கிராம மக்கள் மருத்துவமனையில் குவிந்தனர். பேரக்குழந்தைகள் புடைசூழ ரேகா தனது 17வது குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தார். ரேகா குடும்பம் நாடோடி குடும்பம். இவர்கள் குடும்பத்தில் யாரும் பள்ளிக்குச் சென்றதில்லை. ஒரே இடத்தில் நீண்ட காலம் தங்குவதில்லை. மகப்பேறு மருத்துவர் டாக்டர் ரோஷன் தரங்கி கூறுகையில்,’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ரேகா தனக்கு இது நான்காவது பிரசவம் என்று கூறியிருந்தார். இது உண்மையில் அவருடைய 17வது பிரசவம் என்று தெரியவந்தது. இனி அவருக்கு கருத்தடை செய்யப்படும்’ என்றார்.