Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி அமுதாவுக்கு கூடுதல் பொறுப்பு: அரசு உத்தரவு

சென்னை: முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி அமுதாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் முக்கிய துறைகளின் செயலாளர்கள், ஆணையர்கள், மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் உள்பட 65 ஐஏஎஸ் அதிகாரிகள் கடந்த 16ம் தேதி அதிரடியாக மாற்றப்பட்டனர். உள்துறை செயலாளராக தீரஜ் குமார், பள்ளி கல்வித்துறை செயலாளராக மதுமதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். சென்னை மாநகராட்சி கமிஷனராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டார். உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயலாளராக இருந்த பி.அமுதா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரி அமுதாவிற்கு கூடுதல் பொறுப்பை வழங்கி தமிழக அரசு நேற்று பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக இருக்கும் பி.அமுதா, முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மக்களுடன் முதல்வர் திட்டம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்க்கும் இதர திட்டங்களுக்கான சிறப்பு அதிகாரி பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக இருந்த டி.மோகன், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையராக கடந்த 16ம் தேதி நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.