முதல்வருக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி அதிரடி கைது: ‘தெரியாமல் செய்துவிட்டேன்’ என போலீசார் காலில் விழுந்து கதறல்
சென்னை: கோயம்பேடு ரோகினி திரையரங்கில் கடந்த 2 நாட்களுக்கு முன், திரைப்படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த பொதுமக்களிடம் யூடியூப் சேனல் நிருபர்கள் பேட்டி எடுத்தனர். படம் பற்றி பேசிய மக்கள், கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 பேர் இறந்து போனதற்கு வருத்தம் தெரிவித்தனர். திடீரென அங்கு வந்த வாலிபர் ஒருவர், மைக்கை பிடுங்கி தவெக மீது பொய்யான குற்றச்சாட்டை பரப்பும் முதல்வருக்கு மிரட்டல் விடுவித்து, ‘நான் தவெக நிர்வாகி, தீவிர விஜய் ரசிகர், எனது வீடு மதுரவாயலில் உள்ளது, முடிந்தால் என்னை கைது செய்து பார்’ என ஆவேசமாக பேசினார்.
மேலும் யூடியூப் சேனல் நிருபர்களை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, அந்த தவெக நிர்வாகியை கைது செய்வதற்கு கோயம்பேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் யுவராஜ் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், தீவிரமாக தேடியபோது, தவெக நிர்வாகி போலீசாருக்கு பயந்து வீட்டிற்குகூட வராமல் தலைமறைவானது தெரிந்தது. இதையடுத்து அவரது செல்போன் எண்ணை வைத்து, டவர் மூலம் தொடர்ந்து கண்காணித்தபோது, வளசரவாக்கம் பகுதியில் இருப்பது தெரிந்தது.
அதன்படி நேற்று அதிகாலை 4.30 மணியளவில் நண்பர்கள் வீட்டில் பதுங்கியிருந்த தவெக நிர்வாகியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர், கோயம்பேடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரை சேர்ந்த தவெக உறுப்பினர் கோகுல் (29) என்பதும், அதே பகுதியில் உணவு டெலிவரி வேலை செய்து வருவதும் தெரியவந்தது. விசாரணையில், ‘நான் ஒரு சாதாரண ஆள். எனது குடும்ப கஷ்டத்திற்காக உணவு டெலிவரி வேலை செய்து வருகிறேன். முதல்வருக்கு மிரட்டல் விடுவித்தது மிகப்பெரிய தவறு. இனிமேல் இதுபோல் தவறு செய்யமாட்டேன். என்னை விட்டுவிடுங்கள் என போலீசாரின் காலில் விழுந்து கதறியுள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட கோகுல் மீது ஆபாசமாக பேசுதல், கிரிமினல் மிரட்டல் உள்ளிட்ட 2 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.