Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாகத்தின் கீழ் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு: ஐ.நா., ஒன்றிய அரசின் நிறுவனம் பாராட்டு

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாகத் திறன் மேன்மையை ஐ.நா. அமைப்பும், ஒன்றிய அரசின் நிறுவனங்களும் பாராட்டியுள்ளன. தமிழ்நாடு இந்திய நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் முன்னணி மாநிலமாக திகழ்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் 2021 மே மாதம் 7ம் நாள் பொறுப்பேற்றது முதல் நிறைவேற்றி வரும் புதுமையான, புரட்சிகரமான திட்டங்களால் தமிழ்நாடு மிகக் குறுகிய காலத்தில் பல வெற்றிகளை பெற்று சாதனைகள் புரிந்து தேசிய அளவில் முதல் இடம் என்னும் பெருமையை நிலைநாட்டியுள்ளது.

‘ஆங்கில இதழ்’ ஒன்றின் இயக்குநர் கூறுகையில்,‘இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களின் செயல்பாடுகளை கணித்ததாகவும், அதில் ஒட்டு மொத்த செயல் திறனிலும் சிறந்து விளங்கும் பெரிய மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். முதல்வர், ‘இந்த கடிதத்தை படித்தபோது எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை; இது தனிப்பட்ட எனக்கு கிடைத்த பெருமை அல்ல, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த பெருமையாகும்.

தமிழ்நாட்டிற்கு கிடைத்த சிறப்பாகும்’ என்று 29.11.2021 அன்று சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் குறிப்பிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூர், கொடிசியா வளாகத்தில் 23.11.2021 அன்று நடந்த முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு மாநாட்டில், ‘தொழில் நிறுவனங்கள் நம் மாநிலத்தில் முதலீடு செய்வதற்கு ‘நிலம்’ கையிருப்பு மிகப்பெரிய பங்காற்றுகிறது.

அண்மையில் வெளிவந்த ஒன்றிய அரசினுடைய மாநிலங்களுக்கான IPRS தரவரிசையில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக அறிவித்திருக்கிறது. இது நமக்கெல்லாம் பெருமை. நாம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற லட்சிய இலக்கினை அடைவது வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையை எல்லோருக்கும் அளித்துக் கொண்டிருக்கிறது’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

ஆங்கில இதழ் 2020 ஆய்வறிக்கையில், 2021 மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பதற்கு முன் தமிழ்நாட்டில் இருந்த முந்தைய ஆட்சியில் தமிழ்நாடு எந்த அளவில் பின்தங்கி இருந்தது என்பதை 7.12.2020 நாளிட்ட, ‘ஆங்கில இதழ் ஆய்வு அறிக்கை’ புள்ளி விவரங்களோடு தெளிவுபடுத்தி இருந்தது, இந்திய அளவில் 20 மாநிலங்களை ஆய்வு செய்து வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் தமிழ்நாடு,

* உள்­கட்­ட­மைப்­பில் 20வது இடம் - கடைசி இடம்

* ஐந்து ஆண்­டு­க­ளின் செயல்­பாட்­டில் 19வது இடம்

* விவ­சா­யத்­தில் 19வது இடம்

* சுற்­று­லா­வில் 18வது இடம்

* உள்­ள­டக்­கிய வளர்ச்­சி­யில் 18வது இடம்

* தொழில் முனை­வோர் முன்­னேற்­றத்­தில் 14வது இடம்

* ஆட்சி நிர்­வா­கத்­தில் 12வது இடம்

* தூய்­மை­யில் 12வது இடம்

* சுகா­தா­ரத்­தில் 11வது இடம்

* கல்­வி­யில் 8வது இடம் என அன்று நிலவிய தமிழ்நாட்டின் அவல நிலையை படம் பிடித்துக் காட்டியது ஆங்கில இதழ் ஆய்வறிக்கை.

2023-24ம் ஆண்டிற்கான, ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பு நீடித்த நிலையான வளர்ச்சி குறியீடுகள் குறித்த நான்காவது ஆய்வறிக்கையை 2024, ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. அந்த அறிக்கையில், திராவிட மாடல் ஆட்சி தொலைநோக்கு சிந்தனைகளுடன் செயல்படுத்தி வரும் சீரிய திட்டங்களால் வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுச் சிறந்த மாநிலமாக திகழ்கிறது என்று பாராட்டியது.

இந்திய ரிசர்வ் வங்கியின் 2023-24ம் ஆண்டிற்கான வளர்ச்சி குறித்த ஆய்வேடு மனித வளங்களை வளர்ப்பதில் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களைவிட தமிழ்நாடு முன்னேற்றம் கண்டு இந்தியாவில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்துள்ளது என்று பாராட்டியது. ஒன்றிய அரசின் நிர்யாத் நிறுவனம் ஜவுளி துணிகள் ஏற்றுமதி குறித்து 2022-23ம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையில் தேசிய அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த ஜவுளி துணிகளின் மதிப்பில் தமிழ்நாடு ஏறத்தாழ நான்கில் ஒரு பங்கினை, அதாவது, 22.58 சதவீத துணிகளை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது என்று பாராட்டியது.

2022-23ம் ஆண்டிற்கான தேசிய இறக்குமதி, ஏற்றுமதி வர்த்தக ஆண்டாய்வு பதிவுகள் குறித்த அறிக்கையில், தமிழ்நாடு மட்டும் 5.30 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்து இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது என்றும் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முத்திரை திட்டங்களில் ஒன்று புதுமைப்பெண் திட்டம். அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படித்து உயர்கல்வியில் சேரும் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தினால் கல்லூரிகளில் சேரும் மாணவியர் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது என மாநில திட்டக்குழு தனது ஆய்வின்மூலம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் 31.1.2025 அன்று 2024-25ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில், தோல் பொருட்கள் உற்பத்தி துறையில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு 2024ம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் 79வது பொதுச்சபையில் சர்வதேச பணிமுனைப்பு குழு விருது United Nation Interagency Task Force Award 25.9.2024 அன்று அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

2024-25ம் ஆண்டில் பொருளாதாரத்தில் தமிழ்நாடு 9.69 சதவீத உண்மை வளர்ச்சி வீதத்துடன் இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும் இது, கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த மிக உயர்ந்த வளர்ச்சி வீதம் ஆகும். இதற்கு முன், 2017-18ம் ஆண்டில் அதிக வளர்ச்சி வீதம் 8.59 சதவீதமாக இருந்தது. 2020-21ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் குறைந்தபட்சமாக 0.07 சதவீதம் என பதிவாகியது. இக்காலகட்டத்தில் பல மாநிலங்களில் வளர்ச்சி இறங்கு முகமாக இருந்தன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் வளர்ச்சி ஏறுமுகமாகவே இருந்தது என குறிப்பிட்டு பாராட்டப்பட்டது.

* ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவோம்

சென்னை பொருளியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான கே.ஆர்.சண்முகம், 2021-22ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 8 சதவீதம் அல்லது அதற்கு மேலான வளர்ச்சியை தமிழ்நாடு எய்தி வருவதாக தெரிவிக்கிறார். எதிர்வரும் ஆண்டுகளில் இந்த 9.7 சதவீதம் என்ற வளர்ச்சி வீதத்தினை தக்கவைத்துக் கொண்டால். 2032-33ம் ஆண்டில் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கினை அடையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

* அல்லும் பகலும் உழைக்கும் முதல்வர் ஒன்றிய இணை அமைச்சர் புகழாரம்

டெல்லி நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கடந்த 21.7.2025 அன்று, ஒரு கேள்விக்கு அளித்துள்ள பதிலில், ‘தேசிய அளவிலான தனிநபர் வருமானம் ரூ.1,14,710 என்பதை விட தமிழ்நாடு ரூ.1,96,309 என உயர்ந்து தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு இந்தியாவில் 2வது இடம் பெற்றுள்ளது’ என அறிவித்து பாராட்டியுள்ளார்.  நான்கு ஆண்டுகளில் இவை எல்லாம் எப்படி சாத்தியமானது என்பதை ஆராயும் இடத்தில்,

முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ம் ஆண்டில் ஆட்சி பொறுப்பேற்றது முதல் மெய்வருத்தம் பாராது - கண்துஞ்சாது - பசி நோக்காது - பிறர் கூறும் குறைகளுக்கு அஞ்சாது - கருமமே கண் எனக் கொண்டு - அல்லும் பகலும் அயர்வின்றி உழைப்பதினால்தான், தமிழ்நாடு இந்திய நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் புதிய திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி, முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்பது உறுதியாகிறது. இதனால் தான், மக்களின் முழு ஆதரவையும் பெற்று நாட்டிலேயே சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்.