அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயம். வள்ளுவர்கோட்டம், அண்ணாசாலை ஆகிய இடங்களில் அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
சென்னை: பேரறிஞர் அண்ணா 117ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் அவரது படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். காஞ்சிபுரத்தில் நடராஜர் - பங்காரு அம்மாள் தம்பதிக்கு 15.09.1909 அன்று மகனாகப் பிறந்தார் அண்ணா. எளிய குடும்பத்தில் பிறந்து சிறந்த மாணவராகவும், எழுத்தாளராகவும், ஆற்றல் மிக்க பேச்சாளராகவும், பண்பட்ட அரசியல் வாதியாகவும், உத்தம தலைவராகவும் திகழ்ந்தார். தமது சிறந்த பேச்சாற்றல் மூலம் மக்களிடையே அறிவுப் புரட்சியை ஏற்படுத்தினார். “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்கின்ற கோட்பாட்டை மக்களிடையே விதைத்தார். மாற்றாரையும் மதிக்கக் கற்றுத்தந்த மாபெரும் தலைவர் ஆவார்.
கலைஞரின் ஆட்சிக்காலத்தில், அண்ணா கண்ட கனவினை நனவாக்கிடும் வகையில், கிராமங்கள் புத்துணர்வு பெற அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், அண்ணாவின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம், மற்றும் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றை அமைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, மெரினா கடற்கரை, காமராசர் சாலையில் உள்ள அண்ணாவின் நினைவிடம் முழுமையாக புனரமைக்கப்பட்டு, 26.2.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது. அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் நாள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அண்ணாவின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர், அமைச்சர் பெருமக்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்றார். நீட்டை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன்; உரிய கல்வி நிதிக்காக போராடுவேன். தமிழ் மொழி, பண்பாடு, பெருமைக்கு எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்து போராடுவேன். உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்க தேவையான நிதிக்காக போராடுவேன். வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் SIRக்கு எதிராக நிற்பேன் என உறுதிமொழி ஏற்றனர். முதல்வருடன் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார். பேரறிஞர் அண்ணா அவர்களின் 117ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, அண்ணா சாலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, திருவுருவப் படத்திற்கு மலர் தூவி முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.