கலைஞர் கற்று தந்த உழைப்பு என் உதிரத்தில் இருக்கும் வரை நான் என் கடமையை நிறைவேற்றுவேன் :முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னை : சென்னை கொளத்தூரில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், "காலையில் இருந்து கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டேன். மாணவர்களின் முகத்தை பார்க்கும்போது உற்சாகம் அடைகிறேன். மாணவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கும்போது எனது கடமையை வேகமாக நிறைவேற்ற வேண்டும் என்ற உத்வேகம் தோன்றுகிறது. எனது உடலில் உயிர் இருக்கும் வரையில் கலைஞர் கற்றுத் தந்திருக்கக் கூடிய உழைப்பு என் உதிரத்தில் இருக்கும் வரை உறுதியாக நான் என் கடமையை நிறைவேற்றுவேன். |நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். நான் இருக்கிறேன்.
அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பெற்றுள்ள பயிற்சி சிறிய துவக்கம்தான். இதே பாதையில் வெற்றி பெற தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். வளர்ச்சிக்கேற்றார்போல் மாணவர்கள் அப்கிரேட் ஆக வேண்டும்.ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஏராளமானவை உள்ளன, எது வேண்டுமோ அதை தேர்வு செய்து கற்க வேண்டும். படிப்புதான் கடைசி வரை வாழ்வில் துணைநிற்கும்; உங்கள் எதிர்காலத்துக்கு என்ன தேவையோ அதை நோக்கி நடை போடுங்கள். தமிழ்நாட்டின் நலன் காக்க நான் இருக்கிறேன் என்பதை மறந்து விடாதீர்கள். தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்புக்கு திராவிட மாடல் அரசு இருக்கிறது. தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்பது நமது ஒற்றுமையை காட்டுகிறது,"இவ்வாறு தெரிவித்தார்.