சென்னை : பாரதியாரின் நினைவுநாளினை "மகாகவி நாள்" எனக் கடைப்பிடிக்க அறிவிப்பு செய்தோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாட்டுக்கொரு புலவன் பாரதி. தம் கவித்துவ, புரட்சிகர எழுத்துகள் மூலமாக எண்ணற்ற மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டிய மகாகவி பாரதியின் 143வது பிறந்தநாள் இன்று. இதையொட்டி பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "திறமையால் இங்கு மேனிலை சேர்வோம்; தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்" எனப் பாடிப் பெண்களின் உயர்வை வலியுறுத்திய மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாள்! நமது திராவிடன் மாடல் அரசு ஆட்சிக்கு வந்ததுமே பாட்டுக்கொரு புலவன் பாரதி மறைவெய்திய நூற்றாண்டினையொட்டி அவரது புகழ் பரப்பும் 14 சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டுச் செயல்படுத்தி வருகிறோம்.
பெண்களின் உயர்கல்வியை உறுதிசெய்யும் நமது அரசின் திட்டத்துக்குப் பாரதியின் கவிதையில் இருந்தே புதுமைப்பெண் எனப் பெயரிட்டோம். பாரதியாரின் நினைவுநாளினை "மகாகவி நாள்" எனக் கடைப்பிடிக்கவும் அறிவிப்பு செய்தோம். சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் புதுமையை நோக்கி விரைந்து தமிழ்ச் சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம்!" இவ்வாறு தெரிவித்துள்ளார்.


