2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
சென்னை : சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் இன்று (அக்.28) நடைபெற்றது.
இப்பயிற்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய உரை பின்வருமாறு,
“நம் இயக்கம் எந்நாளும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பதற்கு அடித்தளமாக இருக்கும் உங்கள் மீது நம்பிக்கை வைத்து, “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற முழக்கத்தை முன்னெடுத்திருக்கிறோம்.
உங்களுடைய உழைப்பினால், ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் இருக்குற நாம், அடுத்து ஏழாவது முறையாவும் ஆட்சி அமைக்க வேண்டும். அதற்குதான் இந்தப் பயிற்சிக் கூட்டம்.
எப்போதும் மக்கள் கூடவே இருந்து பணியாற்றும் உங்களுக்கு, தேர்விற்கு தயாராகிற மாணவர்கள், எல்லாவற்றையும் படித்த பிறகு, மீண்டும் ஒருமுறை revision செய்வதுபோல, நாம் செய்கிற revision-தான், இந்தப் பயிற்சிக் கூட்டம்.
2019-ஆம் ஆண்டு முதல், நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும், மகத்தான வெற்றிகளை பெற்று வருகிறோம். நம்முடைய வெற்றிகள், எதிரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 2026 தேர்தலிலும் நாம்தான் வெற்றிபெற போறோம். அன்றைக்கு தலைப்புச் செய்தி, “திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடங்கியது!” என்பதுதான்.
இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை. உங்கள் உழைப்பு மீதும், ஆட்சியின் சாதனைகள் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் வைத்திருக்கிற நம்பிக்கையில் சொல்கிறேன்.
நம் திராவிட மாடல் அரசின் திட்டங்களும் - சாதனைகளும், கோடிக்கணக்கான மக்களுடைய உள்ளங்களிலும் இல்லங்களிலும் சென்று சேர்ந்திருக்கிறது.
லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தையும், தொழில்துறையில் மிகப்பெரிய பாய்ச்சலையும், கல்வித் துறையில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறோம். இதுதான் திராவிட மாடலின் அடையாளம். இந்தியாவில் எந்த மாநில அரசும் நம் அளவிற்கு சாதனைகள் செய்திருக்க மாட்டார்கள்.
ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டிற்கு செய்துவரும் துரோகங்களையும், நிதி ஒதுக்கீடுகளில் செய்யப்படும் வஞ்சகங்களையும் எடுத்துச் சொல்லி, ‘தமிழ்நாடு போராடும் - தமிழ்நாடு வெல்லும்’- என்ற முழக்கத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கு சென்று பரப்பல் செய்து, இந்த மாபெரும் முன்னெடுப்பை வெற்றியடைய வைத்த கழகத்தின் இரத்த நாளங்களான உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய பாராட்டுகள்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் ஏற்படுத்திய சுயமரியாதை உணர்வால்தான், பா.ஜ.க.வின் பாசிச ஆட்சிக்கு அடிபணியாமல் முதுகெலும்போடு எதிர்த்து நிற்கிறோம். மக்களுக்கான உரிமைக்காக போராடி வாதாடி வெற்றிபெற்று வருகிறோம். இதையெல்லாம் பார்த்துதான், பா.ஜ.க.விற்கு நம் மீது கோபம் வருது. அதுனால்தான், பல்வேறு சூழ்ச்சிகளில் ஈடுபடுகிறார்கள்.
தி.மு.க இந்த மண்ணில் இருக்கும்வரை பா.ஜ.க.வின் பகல் கனவு பலிக்காது. வாக்குரிமையை பறிக்கும் SIR திட்டத்தை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்.
அனைவரும் ஒருங்கிணைந்து ‘என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பரப்புரையை முன்னெடுக்க வேண்டும். மாநில நிர்வாகியாக இருந்தாலும்கூட, அவரவர் வாக்குச்சாவடியில் வெற்றி பெறுவது இலக்காக இருக்க வேண்டும். நானே கூட என்னுடைய வாக்குச்சாவடியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்று, அங்கும் நம்முடைய வெற்றியை உறுதிசெய்வதற்கான பரப்புரையில் ஈடுபடுவேன்.
தி.மு.கழகத்தினரின் முகங்களில் நான் உதய சூரியனை பார்க்கிறேன். அதனைத் தமிழ்நாடு மக்களின் இதய சூரியனாக மாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் கழகத்தினருக்கு இருக்கிறது.
2021 தேர்தலில் தமிழ்நாட்டை கொத்தடிமை அதிமுக கூட்டத்திலிருந்து மீட்ட தேர்தல், 2026 தேர்தல் என்பது தமிழ்நாட்டை பாஜக - அதிமுக கும்பலிடமிருந்து பாதுகாப்பதற்கான தேர்தல்.
2026-ல் நடக்க இருக்கிற ஜனநாயகத் தேர்தல் - தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கிற தேர்தல்; தனித்தன்மையோடு தலைநிமிர்ந்து நிற்கிற நம்முடைய ஆட்சியா? டெல்லிக்கு வளைந்து கொடுக்குற அடிமைகளின் ஆட்சியா? என்று தீர்மானிக்கிற தேர்தல்; தமிழ்நாட்டின் சுயமரியாதையையும், தனித்தன்மையையும் காப்பாற்றபோகிற தேர்தல்.
தமிழ்நாட்டை அழிக்க, இன எதிரிகளும் தமிழ்த் துரோகிகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வருகிறார்கள். இவர்களை வீழ்த்தி - நம்முடைய மண் – மொழி – மானம் காக்க வேண்டும்.
தமிழ்நாடு இப்போது சமூக, அரசியல், பொருளாதார படையெடுப்பை சந்தித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு அனைத்து வகையிலும் அநீதி இழைக்கப்படுகிறது. இந்தியின் பெயரால் - சமஸ்கிருதத்தின் பெயரால் - ஜி.எஸ்.டி-யின் பெயரால் - புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, சட்டங்கள், உத்தரவுகள், ஆளுநர் என தொல்லை மேல் தொல்லை கொடுக்கிறார்கள். இது தமிழ்நாடு மீது தொடுக்கப்படும் தாக்குதல். இந்த தாக்குதலை முறியடிக்கிற வல்லமை நமக்குதான் இருக்கிறது.
பெயரளவிற்கு திராவிட கட்சியாக இருந்த அதிமுக-வை அமித்ஷாவிடம் விழுந்து அடகு வைத்துவிட்டார். அதனை அதிமுக-வினரே விரும்பவில்லை. அந்த கூட்டணியை தமிழ்நாட்டு மக்களும் ஏற்கவில்லை. நம் கூட்டணி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பயன்படுத்தி அனைத்து தொகுதிகளிலும் வெல்வோம்.
திராவிட மாடல் ஆட்சியில் வளப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டை கபளீகரம் செய்து நாசம் செய்ய திட்டமிடும் கூட்டத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியாக வேண்டும்.
மக்கள் நலனையும், மாநில உரிமைகளையும் காக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் தமிழ்நாடு தலைகுனியாது!”
