ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் குறைந்த விலையில் மருந்து,மாத்திரைகளை வழங்கும் வகையில், 1000 முதல்வர் மருந்தகங்களை காணொளி காட்சியின் மூலம் முதல்வர் நேற்று மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 இடங்களில் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டது.
இதில் ராமநாதபுரம் நகரில் நடந்த முதல்வர் மருந்தக விற்பனை மையம் திறப்பு விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் குத்துவிளக்கேற்றி வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். உடன் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
முதல்வர் மருந்தகம் மேலும் ராமநாதபுரம் மாவட்ட வர்த்தகன் தெரு-ராமேஸ்வரம், பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் அருகில், கமுதி, மண்டபம், வாலாந்தரவை, திருப்பாலைக்குடி, திருவாடானை, செல்வநாயகபுரம், முதுகுளத்தூர், அபிராமம், அரண்மனை-ராமநாதபுரம், வெளிப்பட்டிணம்-ராமநாதபுரம், ஆனந்தூர், ஆர்.எஸ்.மங்கலம், கீழமுந்தல்-கடலாடி, திருவள்ளுவர் நகர்-பரமக்குடி, பாம்பூர்-பரமக்குடி, திருவரங்கம்-முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் செயல்படுகின்றன.
முதல்வர் மருந்தகங்கள் மூலம் மருந்துகள் 20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை மருந்துகளின் வகைக்கேற்ப குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் ஜுனு, ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், கூட்டுறவுத்துறை கண்காணிப்பு அலுவலர் மீனாட்சி சுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட கடை தெருவில் அமைந்துள்ள பாய்மா காம்ளக்ஸ் வளாகத்தில் பிரப்பன் வலசை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் முதல்வர் மருந்தகம் கடை நேற்று திறக்கப்பட்டது.
இந்த மருந்தகம் கடை திறப்பு நிகழ்ச்சிக்கு பிரப்பன் வலசை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பதிவாளர் பாலமுருகன் வரவேற்றார். இதில் மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா ரிப்பன் வெட்டி மருந்தகத்தை திறந்து வைத்தார். மருந்தகம் பொறுப்பாளர் மஞ்சுளா நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் பணியாளர்கள்,அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கமுதி அருகே அபிராமம் மற்றும் நரியன் ஆகிய பகுதிகளில் முதல்வர் மருந்தகம் காணொளி வாயிலாக நேற்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் ரத்தினவேல், கூட்டுறவு சார்பதிவாளர்கள் வேல்முருகன், சண்முகப்பிரியா, கூட்டுறவு சங்க பொது மேலாளர் போஸ், அபிராமம் நகர கூட்டுறவு வங்கி பொது மேலாளர் யூசுப் கனி, நகரத்தார் குறிச்சி கூட்டுறவு செயலாளர் மணி மற்றும் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், அபிராமம் பேரூராட்சி தலைவர் ஜாகீர் உசேன், தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், அபிராமம் பேரூராட்சி துணைத் தலைவர் மாரி மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், வார்டுகவுன்சிலர்கள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.