சென்னை: பிஎச்டி மாணவர்களை வெளிநாடு அனுப்புவதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை பல்கலையில் இன்று நடக்கிறது. சர்வதேச பரிமாற்ற திட்டத்தின் கீழ் மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான விருப்பங்களை ஆராய சென்னை பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழு முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து, வெளிநாடுகளில் ஆராய்ச்சி அல்லது பயிற்சி திட்டங்களில் பங்கேற்க விருப்பமுள்ள பிஎச்டி மாணவர்களை கண்டறிய வேண்டும் என்று பல்கலைக்கழக அடிப்படை அறிவியல், உயிரி மருத்துவ அறிவியல், சமூக அறிவியல் கலை, அயல்நாட்டு மொழிகள் உள்பட பல்வேறு துறைகளை ஒருங்கிணைப்புக்குழு அறிவுறுத்தியுள்ளது.
இத்திட்டம் மாணவர்கள் உலகளாவிய கல்வி அனுபவங்களை பெறவும், கல்விப்பணியை வலுப்படுத்தவும் உதவும் என்பதால் இதுகுறித்து ஆராய அனைத்து துறைகளின் தலைவர்கள் மற்றும் ஆர்வமுள்ள பேராசிரியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் ஆலோசனை கூட்டம் நவம்பர் 11ம் தேதி (இன்று) பிற்பகல் நடைபெறும் என சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ரீட்டா ஜாண் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில், பிஎச்டி மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு ஏற்ற பரிமாற்ற திட்டங்கள் மற்றும் மாணவர்களின் விருப்பம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

