Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னை மாநகராட்சியில் 3,400 தெருக்களின் பெயர்களை விரைவில் மாற்ற நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சியில் 3,400க்கும் மேற்பட்ட தெருக்களின் பெயர்கள் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு தெருக்களில் உள்ள சாதி பெயர்களை மாற்றும் பணியை தொடங்கியுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு உத்தரவின் பேரில், சென்னை மாநகராட்சியில் 3,400க்கும் மேற்பட்ட தெருக்களின் பெயர்கள் மாற்றப்பட உள்ளன. சென்னை மாநகராட்சி, சாலை பதிவேடுகளை அடிப்படையாக கொண்டு சாதி பெயர்களை கொண்ட சாலைகளின் பட்டியலை இறுதி செய்யும் பணியை தொடங்கியுள்ளது.

மாநகராட்சியில் உள்ள 35,000 சாலைகளில் சுமார் 3,400 சாலைகள் சாதி பெயர்களை கொண்டுள்ளன. மாநகரத்தின் மைய பகுதிகளில் 2011க்கு முன்பே பெரும்பாலான சாதி பெயர்கள் நீக்கப்பட்டுவிட்டன. தற்போது, முன்பு தனி நகராட்சிகளாக இருந்த 7 சேர்க்கை மண்டலங்களில் உள்ள சாலைகளில்தான் இதுபோன்ற பெயர்கள் அதிகமாக உள்ளன. இவை அனைத்தும் நவம்பர் 11ம் தேதிக்குள் மாற்றப்படவுள்ளது.சாலைகள் அடையாளம் காணப்பட்டவுடன், கவுன்சிலர்கள் பகுதி சபை கூட்டங்களை நடத்தி புதிய பெயர்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றுவார்கள். பொதுமக்கள் முடிவின் அடிப்படையிலேயே சாலைகளுக்கு பெயர் சூட்டப்படும். இதுகுறித்து அனைத்து கவுன்சிலர்களுக்கும் விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படவுள்ளது.

சாதி பெயர்கள் குடும்ப பெயர்களாக இருந்தால், அவை சுருக்கப்பட்டு முதலெழுத்துக்களாக மாற்றப்படும். பெயர்கள் முழுவதும் சாதி பெயர்களாக இருந்தால், அவை தலைவர்கள் அல்லது மலர்களின் பெயர்களால் மாற்றப்படும். பின்னொட்டுகளாக வரும் சாதி பெயர்கள் மட்டும் நீக்கப்படும். உதாரணமாக, தி.நகரில் உள்ள ஜி.என்.செட்டி சாலை, கோபதி நாராயண சாலை என மாற்றப்பட்டுள்ளது. மேற்கு மாம்பலத்தில், சீனிவாசா (ஐ) தெரு, பாலகிருஷ்ணா (என்) தெரு, சீனிவாசா (பி) தெரு என சாதிப் பெயர்கள் முதலெழுத்துக்களாக மாற்றப்பட்டுள்ளன.

இதுவரை அடையாளம் காணப்பட்ட சில சாலைகளில், கோடம்பாக்கம் ரெட்டி தெரு, வெங்கட ரெட்டி சாலை, வன்னியர் தெரு, மயிலாப்பூர் டாக்டர் நாயர் சாலை, வண்ணாரப்பேட்டை ராமானுஜ ஐயர் தெரு, சூளைமேட்டில் உள்ள ரெட்டி ராமன் தெரு, சைதாப்பேட்டையில் உள்ள பிராமணர் தெரு ஆகியவை அடங்கும்.புதிய பெயர் பலகைகள் விரைவில் அமைக்கப்படும். இதற்காக மாநகராட்சி டெண்டர் விட உள்ளது. இந்த புதிய பலகைகள் 3டி தொழில்நுட்பத்துடன், பிரதிபலிக்கும் விளக்குகளுடன் கூடியதாக இருக்கும். இந்த மாற்றம், சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் ஒரு முக்கிய படியாக கருதப்படுகிறது. சாதிய பாகுபாடுகளை குறைத்து, அனைவரும் சமமாக வாழும் சூழலை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.