சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் முதல்வர் நேரில் ஆய்வு: பொதுமக்கள் பாராட்டு
சென்னை: தி.நகரில் நேற்று நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படுவதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கு, அவர்கள் அன்றாடம் அணுகும் அரசு துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை 15.7.2025 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் தொடர்பாக முதல்வர் அவ்வப்போது அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது, தகுதியுள்ள அனைத்து மனுக்களும் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், வருவாய், கூட்டுறவு, ஆதிதிராவிடர் நலம், எரிசக்தி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆகிய முக்கிய துறைகளின் மனுக்கள் மீது அதிக கவனம் செலுத்திட வேண்டும். குறிப்பாக சொத்து வரி, குடிநீர், விவசாயிகள் கோரிக்கைகள், ரேஷன் கார்டுகளில் முகவரி மாற்றம், பட்டா சம்பந்தமான மனுக்கள் ஆகியவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பெறப்பட்ட மனுக்களை உரிய கால கட்டத்திற்குள் தீர்வு காணவும் உத்தரவிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, தி.நகர், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், 133வது வார்டில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ இரண்டாவது முகாமிற்கு நேரில் சென்று ஆய்வு செய்து, பொதுமக்களிடம் மனுக்களின் விவரங்கள் குறித்தும், முகாமில் செய்துதரப்பட்டுள்ள வசதிகளும் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த முகாமில், பிறப்பு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதையும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அட்டைகள், வங்கி கணக்கு தொடங்குவதற்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருவதை முதல்வர் பாராட்டினார். மேலும், முகாமில் மனுக்கள் பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்து வரும் பொதுமக்களின் மனுக்களையும் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
தி.நகர், 133வது வார்டில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ முதல் முகாமில் 852 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதே வார்டில் 2வது முகாம் நேற்று நடந்தது. இந்த ஆய்வின்போது, முதல்வரை சந்தித்த பொதுமக்கள், அரசு துறைகளின் சேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்று பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பாராட்டியதோடு, உடனடியாக மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வருவதையும் வரவேற்றனர்.
இந்நிகழ்வின்போது எம்எல்ஏ ஜெ.கருணாநிதி, முதல்வரின் முகவரித்துறை செயலாளர் / சிறப்பு அலுவலர் அமுதா, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், மாமன்ற உறுப்பினர் கே.ஏழுமலை, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.