சென்னை தி.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை பத்திரமாக மீட்டனர் தீயணைப்பு வீரர்கள்
சென்னை: சென்னை, தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலை, ராமச்சந்திரா தெருவில் 3 அடுக்கு கொண்ட தனியார் குடியிருப்பு வளாகம் உள்ளது. இதில் இரண்டாவது தளத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு 7 மணியளவில் திடீரென விபத்து ஏற்பட்டது. அந்த வீட்டில் இருந்த 5 பேரும் இதில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதைதொடர்ந்து தீ விபத்து ஏற்பட்ட இடத்துக்கு எழும்பூர், தி.நகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 50க்கும் மேற்ப்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் தீ மளமளவென 2வது தளத்தில் இருந்து மூன்றாவது தளத்துக்கு பரவியதால் அதிகப்படியான புகைமூட்டம் ஏற்பட்டு, வீட்டில் இருந்தவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வீட்டிற்குள் சிக்கி கொண்ட 5 பேரை தீயணைப்பு வீரர்கள் ஏணிகள் மூலம் பத்திரமாக மீட்டனர். அதைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த தீ விபத்தில் நல்லவாய்ப்பாக எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


