Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னை காசிமேட்டில் அதிகாலையிலே மீன்வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்

சென்னை: புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை காசிமேட்டில் நேற்று அதிகாலை முதலே மீன் வாங்க கூட்டம் அலைமோதியது. வஞ்சிரம் கிலோ ரூ.1200, சங்கரா ரூ.500, இறால் ரூ.300, நெத்திலி ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த மாதம் 17ம் தேதி தொடங்கிய புரட்டாசி மாதம் கடந்த 16ம் தேதி(வியாழக்கிழமை)முடிந்தது. 17ம் தேதி(வெள்ளிக்கிழமை) ஐப்பசி மாதம் பிறந்தது. அது மட்டுமல்லாமல் புரட்டாசி மாதம் முடிந்து நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் அனைவரும் வீட்டில் இருப்பது வழக்கம். அது மட்டுமல்லாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக வெளியூருக்கு வேலைக்கு சென்றவர்கள், மேற்படிப்பு படிக்க சென்றவர்கள் என அனைவரும் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு வீடுகளுக்கு வந்தவர்களுக்கு வாய்க்கு ருசியாக அசைவ உணவு சமைத்து கொடுக்க ஒவ்ெவாரு வீட்டிலும் முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் மட்டன், சிக்கன், மீன் கடைகளை நாடினர்.

சென்னையில் நேற்று காலை மழை பெய்தது. அதையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வியாபாரிகள் மழையில் நனைந்தபடி மீன்களை வாங்கினர். மீனவர்கள் முன்கூட்டியே கடலுக்கு சென்று விசைப்படகுகளிலும், பைபர் படகுகளிலும் மீன்களை பிடித்து கரைத்திரும்பியிருந்தனர். நீண்ட தூரம் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்த மீனவர்களும் நள்ளிரவில் கரை திரும்பினர். இதனால் அனைத்து வகையான மீன்களையும் காசிமேட்டில் அதிக அளவில் காண முடிந்தது.

இதனால் சிறு வியாபாரிகள், பொதுமக்கள் வஞ்சிரம், இறால் உள்ளிட்ட மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். அதே நேரத்தில் கடந்த வாரத்தை காட்டிலும் மீன் விலை அதிகரித்து காணப்பட்டது. இருந்தாலும், விலையை பொருட்படுத்தாமல் அசைவ பிரியர்கள் மீன்களை வாங்கினர். காசிமேட்டில் நேற்று வஞ்சிரம் கிலோ ரூ.1200க்கு விற்பனையானது. இதே போல கொடுவா ரூ.800, சீலா ரூ.500, பால் சுறா ரூ.500, சங்கரா ரூ.500, பாறை ரூ.500க்கும் விற்கப்பட்டது.

இதே போல இறால் ரூ.300, நண்டு ரூ.300, நவரை ரூ.300, பண்ணா ரூ.300, காணங்கத்தை ரூ.300, கடுமா ரூ.300, நெத்திலி ரூ.200க்கும் என்று விற்பனையானது. இதே போல சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன்மார்க்கெட், பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதிகளிலும் மீன் வாங்க கூட்டம் அதிகம் அளவில் இருந்ததை காண முடிந்தது. இதே போல நேற்று ஆட்டு இறைச்சி கிலோ ரூ.1,000க்கும், கோழி இறைச்சி ரூ.280க்கும் விற்பனையானது.