சென்னை: சென்னை காமராஜர் அரங்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. மநீம தலைவர் கமல்ஹாசன் எம்பி வாழ்த்துரை வழங்கினார். நள்ளிரவில் தொண்டர்கள் மத்தியில் திருமாவளவன் கேக் வெட்டினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பியின் பிறந்தநாளை தமிழர் எழுச்சி திருநாளாக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். நேற்று அவருக்கு 63 வயது. இதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது.
சென்னை காமராஜர் அரங்கில் நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் ம.செ.சிந்தனை செல்வன், து.ரவிக்குமார், எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு முன்னிலை வகித்தனர். பிறந்தநாளையொட்டி ஸ்டீபன் ராயல் குழுவினரின் இசை பாய்ச்சல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஜாஹிர் உசேன் குழுவினரின் நடன நிகழ்ச்சி நடந்தது.
கவியரங்க நிகழ்ச்சியை இயக்குநர் நடிகர் கே.பாக்யராஜ் தொடங்கி வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு கவிஞர் விவேகா தலைமை வகித்தார். விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு வரவேற்பு கவிதை வாசித்தார். இதில் கவிஞர்கள் ஆண்டாள் பிரியதர்ஷினி, இளைய கம்பன், தஞ்சை இனியன், அருண்பாரதி, லாவரதன், புனித ஜோதி ஆகியோர் கவிப்பொழிவு நிகழ்த்தினர். பின்னர் ஊடக அரங்கத்தில் ‘மதச்சார்பின்மை காப்போம்’ என்ற தலைப்பில் ஊடக அரங்கம் நடந்தது. இதில் ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர்.
பின்னர் நடந்த வாழ்த்தரங்கத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் எம்பி, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ.லியோனி, முன்னாள் ஏடிஜிபி வே.வனிதா, திரைப்பட இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் வாழ்த்தி பேசினர். நள்ளிரவு 12 மணியளவில் திருமாவளவன் பிறந்தநாள் கேக் வெட்டி தொண்டர்களுக்கு ஊட்டினார். திருமாவளவனின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் வந்திருந்தனர்.
இன்று ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இன்று காலையில் அம்பேத்கர் சிலை, பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து திருமாவளவன் மரியாதை செலுத்துகிறார்.