ஐதராபாத்: சென்னையில் இருந்து ஐதராபாத் செல்லும் விமானத்தில் பெண் ஐடி ஊழியர் தனது கணவருடன் பயணித்துள்ளார். அவர் தனது கணவரின் அருகில் அமர்ந்து இருந்துள்ளார். விமானம் புறப்பட்டவுடன் அவர் தூங்கிவிட்டதாக தெரிகின்றது. ஐதராபாத் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது யாரோ ஒருவர் தன்னை தகாத முறையில் தொடுவதை உணர்ந்திருக்கிறார்.
உடனடியாக அவர் விழித்து பார்த்தபோது அருகில் இருந்த நபரின் கைகள் தன் மீது இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து இருக்கிறார். அந்த நபர் மதுபோதையில் இருந்ததாக தெரிகின்றது. அவரை எச்சரித்த பயணி விமானத்தில் இருந்து இறங்கிய பின்னர் விமான நிலைய காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர். விசாரணையில் தற்செயலாக கை அந்த பெண்ணின் மீது பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.