சென்னையிலிருந்து பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு: பயணிகள் உள்பட 109 பேர் தப்பினர்
சென்னை: சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. பின்பு விமான பொறியாளர்கள் இயந்திர கோளாறை சரி செய்ததும் விமானம் தாமதமாக பெங்களூரு புறப்பட்டு சென்றது. விமானி தகுந்த நேரத்தில் கோளாறை கண்டுபிடித்து எடுத்த நடவடிக்கையால் ஆபத்து தவிர்க்கப்பட்டு, 104 பயணிகள் உள்பட 109 பேர் உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 10.45 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. விமானத்தில் 104 பயணிகள், 5 விமான ஊழியர்கள் உள்பட 109 பேர் இருந்தனர். இந்த விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.
இதையடுத்து அந்த விமானம் புறப்பட இடத்திற்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி விமானத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். பயணிகள் அனைவரும் விமானத்துக்கு உள்ளேயே அமர வைக்கப்பட்டிருந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் விமான பொறியாளர்கள் முயற்சி மேற்கொண்டு, விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை சரி செய்தனர்.
அதன்பின்பு அந்த விமானம் சுமார் ஒன்றேகால் மணி நேரம் தாமதமாக நேற்று பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானம் வானில் பறப்பதற்கு முன்னதாகவே விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, எடுத்த துரித நடவடிக்கை காரணமாக, விமானம் ஆபத்திலிருந்து தப்பியதோடு, விமானத்திலிருந்த 104 பயணிகள் உள்பட 109 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். இந்த சம்பவம், சென்னை விமான நிலையத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.